சகோதரர் திருமா, பொன்னாருக்கு நன்றி சொன்ன கமல்!
சகோதரர் திருமாவளவன் மற்றும் பொன். ராதாகிருஷ்ணன் போன்றோர் எனக்களித்த வரவேற்புரைக்கு நன்றி என்று நடிகர் கமல் ஹாசன் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
கொசஸ்தலை ஆற்றில் எண்ணூர் துறைமுக கழிமுகம், சாம்பல்குளம் பகுதிகளில் வல்லூர், வடசென்னை அனல்மின் நிலையங்களின் சாம்பல்
கழிவுகள் கொட்டப்படுவதாக நடிகர் கமலஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் புகார் தெரிவித்திருந்த நிலையில் இன்று அதிகாலை அப்பகுதிகளை நேரில்
பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து அங்கிருந்த பொது மக்களை சந்தித்த கமல்ஹாசன், அவர்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.
மக்கள் பிரச்சனைக்காக முதன் முதலில் நேரடியாக களத்தில் இறங்கியதற்கு நடிகர் கமல் ஹாசனுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் பலர் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
கொசஸ்தலை ஆற்றில் கழிவுகள் கொட்டப்படுவது தொடர்பாக கமல் ஹாசன் இன்று பார்வையிட்டது குறித்து, மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் பாராட்டு தெரிவித்திருந்தார். எண்ணூர் பகுதியில் செய்யப்பட்டுள்ள ஆக்கிரமிப்புகளை மீட்கவும், அப்பகுதியை சுத்தம் செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார்.
இதேபோல் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன், நடிகர் கமல் ஹாசனுக்கு பாராட்டு தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், கமல் ஹாசன், தீவிரமான மக்கள் பணியில் ஈடுபட இருக்கிறார் என்பதையே, இந்த களப்பணி உணர்த்துவதாக கூறியுள்ளார். மேலும், கமலுக்கு பாராட்டும் தெரிவித்தார்.
மக்கள் பிரச்சனைக்காக முதன் முதலில் நேரடியாக களத்தில் இறங்கியதற்கு நடிகர் கமல் ஹாசனுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் பாராட்டு தெரிவித்திருக்கின்றனர்.
இந்த நிலையில், பாராட்டு தெரிவித்த மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவனுக்கு கமல் நன்றி தெரிவித்து டுவிட் செய்துள்ளார்.
அந்த டுவிட்டரில், சகோதரர் திருமாவளவன் மற்றும் பொன்னார் போன்றோர், எனக்களித்த வரவேற்புரைக்கு நன்றி என்று குறிப்பிட்டுள்ளார். முன்னோடுவோரின் வாழ்த்துக்கள் என் ஊக்கத்தை கூட்டுகிறது என்றும் நடிகர் கமல் ஹாசன், டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.