தகுதி நீக்கத்திற்கு எதிராக மேல்முறையீடு செய்ய வேண்டாம் என்று சசிகலா கூறிவிட்டதால் தங்கதமிழ்ச்செல்வன் மகிழ்ச்சியில் திக்குமுக்காடி வருகிறார்.

தகுதி நீக்கத்திற்கு எதிராக மேல்முறையீடு செய்ய வேண்டாம் என்று சசிகலா கூறிவிட்டதால் தங்கதமிழ்ச்செல்வன் மகிழ்ச்சியில் திக்குமுக்காடி வருகிறார். அதே சமயம் தலையில் குண்டு விழுந்தது போல் தினகரன் அதிர்ச்சியில் இருக்கிறார். 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் செல்லும் என்று தீர்ப்பு வெளியான நாள் முதலே தினகரன் கட்சியில் பிரச்சனை ஆரம்பித்துவிட்டது. நம்பி வந்து எம்.எல்.ஏ பதவியை இழந்துவிட்டோம் என்று ஜூனியர்கள் புலம்ப, எத்தனை நாள் தான் நீதிமன்றம் நீதிமன்றமாக அழைய என்று சீனியர்கள் கேள்வி எழுப்ப ஆரம்பித்தனர். இதனால் தகுதி நீக்கத்தை தொடர்ந்து என்ன செய்வது என்று தெரியாமல் தினகரன் திணற ஆரம்பித்தார். 

ஆனால் 20 தொகுதிகளுக்கும் ஒட்டு மொத்தமாக தேர்தல் வந்தால் சமாளிக்க முடியாது என்று தினகரன் கருதுகிறார். மேலும் தேர்தல் பணியில் அனுபவம் மிக்க, பழனியப்பன், வெற்றிவேல், தங்கதமிழ்செல்வன் போன்றோரும் கூட தேர்தலில் நிற்க வேண்டிய சூழல் உள்ளது. எனவே 20 தொகுதிகளுக்கும் பொறுப்பாளர்களை நியமித்து பணத்தை சரியான முறையில் செலவழிக்கவும் வழி இல்லை. மேலும் தொகுதிக்கு 5 கோடி என்று வைத்துக் கொண்டால் கூட 100 கோடி ரூபாயை உள்ளே இறக்க வேண்டும். 

தற்போதைய சூழலில் வழக்கறிஞர்களுக்கு பீஸ் கொடுக்கவே திணறும் நிலை தினகரனுக்கு உள்ளது. தினகரனுக்காக வழக்குகள் ஆஜர் ஆகும் வழக்கறிஞர்கள் அனைவருமே பணத்தை ஒயிட்டாகவே கேட்கின்றனர். பிளாக் என்றால் முகத்தை திருப்பிக் கொள்கின்றனர். நிலைமை இப்படி இருக்க மேல்முறையீடு என்று சென்றால் நாடாளுமன்ற தேர்தல் வரை ஓட்டிவிடலாம் என்று தினகரன் கருதினார்.

ஆனால் தங்கதமிழ்செல்வன் மற்றும் சில ஜூனியர் எம்.எல்.ஏக்கள் தேர்தலை எதிர்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்த ஆரம்பித்தனர். ஆனால் அதில் சிக்கல் இருப்பதாக கூறி அவர்களை சமாதானம் செய்து மேல்முறையீட்டுக்கு தினகரன் ஒப்புக் கொள்ள வைத்தார். ஆனால் தங்கதமிழ்செல்வன் உள்ளிட்டோர் அதனை ஏற்க மறுத்து தொடர்ந்து முரண்டு பிடித்து வந்தனர். 

மேலும் இந்த விவகாரத்தில் சின்னம்மா என்ன கருதுகிறார் என்றும் கேட்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்த ஆரம்பித்தனர். இதனால் வேறு வழியே இல்லாமல் தகுதி நீக்கத்திற்கு எதிராக மேல்முறையீடா? இல்லை இடைத்தேர்தலா? என்று சின்னம்மாவே முடிவு செய்யட்டும் என்று தினகரன் அதிரடியாக கூறினார். அப்படி என்றால் எங்களை சின்னம்மாவை பார்க்க கூட்டிவிட்டு போங்கள் என்று எம்.எல்.ஏக்கள் அடம் பிடித்தனர். 

இதனை தொடர்ந்தே பெங்களுர் சிறையில் சசிகலாவுடன் – பதவி பறிபோன எம்.எல்.ஏக்களின் சந்திப்பு நிகழ்ந்தது. அப்போது அவர்களுக்கு ஆறுதல் கூறிய சசிகலா என்ன செய்யலாம் என்று அவர்களிடமே கேட்டுள்ளார். பெரும்பாலானவர்கள் தேர்தல் என்று கூற சசிகலாவும் மேல்முறையீடு வேண்டாம் என்று தினகரனிடம் கூறிவிட்டார். இதனால் தங்கதமிழ்செல்வன் உற்சாகத்தில் துள்ள, தினகரனோ இடைத்தேர்தலை எதிர்கொள்வது எப்படி என்று யோசிக்க ஆரம்பித்துள்ளார்.