thanga thamizhselvan criticize panneerselvam

தினகரன் பக்கத்துல உட்காரகூட மறுத்தவர் தான் இந்த பன்னீர்செல்வம் என தினகரன் ஆதரவாளர் தங்க தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார்.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் அதிமுக வேட்பாளர் மதுசூதனனை 40707 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி தினகரன் அபார வெற்றி பெற்றுள்ளார். தினகரனின் ஆதரவாளர்கள் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வெற்றியை கொண்டாடிவருகின்றனர்.

இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய தினகரனின் ஆதரவாளரான தங்க தமிழ்ச்செல்வன், நாங்கள் தான் அதிமுக. மத்திய பாஜக அரசுக்குப் பயந்துபோய், மத்திய அரசின் கைப்பாவையாக செயல்படும் தற்போதைய அரசு ஜெயலலிதாவின் அரசே அல்ல.

18 எம்.எல்.ஏக்கள் தகுதிநீக்க வழக்கு முடிந்து தினகரனுடன் சேர்த்து நாங்கள் 19 பேரும் சட்டசபைக்கு செல்வோம்.. அப்போது வேடிக்கையை பாருங்க.. தினகரனைவிட 18 வருடம் கட்சியிலும் அரசியலிலும் சீனியர் என பன்னீர்செல்வம் சொல்லிருக்காரு. 1998ம் ஆண்டு பெரியகுளம் தொகுதியில் மக்களவை தேர்தலில் தினகரன் நின்றபோது, நான் அம்மா பேரவை மாவட்ட செயலாளராகவும், எம்ஜிஆர் பேரவை இளைஞரணி மாவட்ட செயலாளராக பன்னீர்செல்வமும் இருந்தார். 

அப்போது தேர்தல் பிரசாரம் சமயத்தில், ஒருநாள் இரவு டீ குடிச்சுகிட்டு இருந்தோம். தினகரன் உட்கார்ந்திருந்தார். நான் நின்றுகொண்டிருந்தேன். பட்டையை போட்டுகிட்டு ஒரு ஓரமாக பன்னீர்செல்வம் நின்றுகொண்டிருந்தார். நான் பன்னீர்செல்வத்தை அழைத்து, அண்ணன்.. நான் வயசுல சின்னவன்.. தினகரனும் உங்களவிட சின்னவயசுதான். பரவாயில்லை. நீங்க உட்காருங்கனு சொன்னேன். அதற்கு பன்னீர்செல்வம், அவரு(தினகரன்) உட்கார்ந்திருக்கும்போது நான் எப்போது உட்கார்ந்திருக்கேன் என பதிலளித்துவிட்டார்.

ஆனால், தற்போது ஆட்சி அதிகாரம் இருப்பதால் இப்படியெல்லாம் பேசுகிறார் என தங்க தமிழ்ச்செல்வன் தெரிவித்தார்.