ஆனாலும் விஜய்க்கு செம்ம தில்லு... அதிமுகவை காண்டாக்கிய ஆண்டிபட்டி தங்கம்!
தவறு நடக்கும் போது கண்டிக்க வேண்டும் என்று விஜய் வெளிப்படையாக சொன்னதை வரவேற்கிறேன் தங்க தமிழ்ச்செல்வன் பாராட்டியுள்ளார்.
மெர்சல், தெறி படங்களைத் தொடர்ந்து 3-வது முறையாக அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்துள்ளார். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் பிகில் படத்தின் இசைவெளியீட்டு விழா நேற்று பிரமாண்டமாக சென்னை அருகேயுள்ள தனியார் கல்லூரி ஒன்றில் நடந்தது. இந்த விழாவில் பேசிய விஜய் அதிமுகவை ஓவராக வாரிவிட்டார். இதன் வெளிப்பாடாக அதிமுகவை சேர்ந்த வைகை செல்வன் அரசியல் பேசி விஜய் தனது படத்தை ஓடவைக்கிறார் என பேசினார்.
அதிமுகவை சீண்டிய விஜய்யின் பேச்சுக்கு தி.மு.க. செய்தி தொடர்பாளர் தங்க தமிழ்ச்செல்வன் ஆதரிக்கும் விதமாக உசுப்பேத்தியுள்ளார். அவர் அளித்துள்ள பேட்டியில்; நடிகர் விஜய் கருத்தை நியாயமான கருத்தாக பார்க்கிறேன். காரணம் பிளக்ஸ் பேனர் வைத்தவர் மீது நடவடிக்கை இல்லை. ஆனால் இதை அச்சடித்த அச்சகத்துக்கு சீல் வைக்கிறார்கள். இது போகாத ஊருக்கு வழி சொல்வது போல் தவறான அணுகுமுறை.விஜய் துணிச்சலாக மாநிலத்தை ஆண்டு கொண்டிருக்கிற அரசின் அவல நிலையை தில்லாக சொல்லி காட்டியதற்கு வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்.
அண்மையில் திமுக. சார்பில் முப்பெரும் விழா திருவண்ணாமலையில் நடைபெற்றது. சுபஸ்ரீ இறந்த சமயத்தில் இந்த விழா நடைபெற இருந்தது. அன்று இரவு திருவண்ணாமலையில் மாவட்ட செயலாளர் ஏ.வ.வேலு ‘பிளக்ஸ்’ போர்டு நிறைய வைத்திருந்தார்.
இந்த செய்தியை கேட்டதும் எங்க தலைவர் உடனே எங்கேயும் பிளக்ஸ் போர்டு வைக்க கூடாது, கட்-அவுட் வைக்க கூடாது. மீறி வைத்தால் விழாவுக்கு வரமாட்டேன் என்று சொல்லிவிட்டார். ஒரே நாள் இரவில் அத்தனை பேனரையும் கழற்றி விட்டனர். வெறும் கொடி மட்டும் தான் திருவண்ணாமலையில் இருந்தது. அதன் பிறகே கூட்டத்துக்கு வந்தார்.
பிளக்ஸ்’ அச்சடித்தவர் மீது மட்டும் வழக்கு போடுகிறீர்கள் பேனர் வைத்தவரை கண்டு கொள்ளாமல் உள்ளனர்? காரணம் ஆளும் கட்சி பிரமுகர்தான் அந்த நிகழ்ச்சியை நடத்துகிறார். அவருக்கு மணல் திருட, பிராந்திக்கடை வைக்க அனுமதி கொடுத்திருப்பீர்கள். அந்த வருமானத்தில் அவர் பேனர் வைக்கிறார். அதனால தான் அவர் மேல நடவடிக்கை எடுக்க பயப்படுகிறீங்க. அதனால் தான் விஜய் வெளிப்படையாக தவறு நடக்கும் போது கண்டிக்க வேண்டும் என்று வெளிப்படையாக சொல்லியிருக்கிறார். அவர் சொன்னதை நான் வரவேற்கிறேன், இது பிளக்ஸ் போர்டு பிரச்சனையை மட்டும் இல்லை. அரசாங்கம் செய்யக்கூடிய தவறுகளை கண்டிக்கும் துணிச்சல் விஜய்க்கு உள்ளதை பாராட்டுகிறேன் என இவ்வாறு அவர் கூறினார்.