Thanga Tamizhselvan raise question against Edappadi and modi

எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசிற்கான ஆதரவை தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் திரும்பப் பெறுவதாக ஆளுநர் வித்யாசாகர் ராவிடம் மனு அளித்திருந்தனர்.

இதுதொடர்பாக விளக்கம் அளிக்குமாறு தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்களுக்கு சபாநாயகர் தனபால் உத்தரவிட்டிருந்தார். ஆனால், தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் கர்நாடக மாநிலம் குடகில் உள்ள ரெசார்ட்டில் தங்கியுள்ளனர்.

இந்நிலையில், குடகில் செய்தியாளர்களிடம் பேசிய தினகரன் ஆதரவு எம்.எல்.ஏவான தங்க தமிழ்ச்செல்வன், சபாநாயகரிடம் விளக்கம் அளிக்க கால அவகாசம் கேட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

மேலும் அதிமுகவிலிருந்து பிரிந்த பன்னீர்செல்வமும் அவரது ஆதரவு எம்.எல்.ஏக்களும் கொறடாவின் உத்தரவை மீறி அரசுக்கு எதிராக செயல்பட்டுவந்தபோது அவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் தற்பொழுது தங்கள் மீது மட்டும் ஏன் நடவடிக்கை எடுக்கப்படுகிறது? என கேள்வி எழுப்பினார்.

மோடியை அடிக்கடி எடப்பாடி பழனிச்சாமி சந்திப்பதன் பின்னணி என்ன எனவும் அவர்கள் இருவருக்கும் இடையிலான தொடர்பு என்ன எனவும் கேள்வி எழுப்பினார். மேலும் பழனிச்சாமி மற்றும் பன்னீர்செல்வம் அணிகளை ஆளுநர் ஏன் இணைத்து வைக்கிறார் எனவும் கேள்வி எழுப்பினார்.

இப்படியாக முதலமைச்சர், ஆளுநர், சபாநாயகர் என அனைவர் மீது கேள்விக் கணைகளைத் தொடுத்துள்ளார் தங்க தமிழ்ச்செல்வன்.