அய்யா மறக்காம உங்களுக்கு இரட்டை இலையில் ஓட்டுப் போட்டு விடுகிறேன் !! அப்பாவிப் பெண்ணால் அதிர்ச்சி அடைந்த தங்க தமிழ்செல்வன் !!
தேனியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்திருந்த தங்க தமிழ்செல்வனைப்பார்த்து கையெடுத்து கும்பிட்ட பெண் ஒருவர், அய்யா உங்களுக்கு மறக்காமல் இரட்டை இலை சின்னத்தில் ஓட்டு போட்டுவிடுகிறேன் என கூறி அதிர வைத்தார்.
தேனி மக்களவைத் தொகுதி, அ.ம.மு.க., வேட்பாளர் தங்க தமிழ்செல்வன், வேட்புமனு பரிசீலனைக்காக, கலெக்டர் அலுவலகம் வந்தார். தொண்டர்களுடன் வளாகத்தில் உள்ள கடைக்கு, டீ சாப்பிட உட்கார்ந்தார்.
அந்த வழியாக வந்த பெண் ஒருவர், தங்க தமிழ்செல்வனை பார்த்து கும்பிட்டார். பதிலுக்கு அவரும் கும்பிட்டு நலம் விசாரித்தார். அருகில் வந்த அந்த பெண், ''மறக்காம உங்களுக்கு, 'இரட்டை இலை'யில் ஓட்டு போடுவேன்,'' என, வாக்குறுதி அளித்தார்.
இதைக் கேட்ட தங்க தமிழ்செல்வன், 'அம்மா தாயி, கொஞ்ச நாள் பொறுங்க. நான் சுயேச்சை சின்னத்தில் இம்முறை போட்டியிடுகிறேன். சின்னம் ஒதுக்கிய பின் கண்டிப்பாக உங்களிடம் கூறுவேன்.அதன்பிறகு அச்சின்னத்திற்கு மறக்காம ஓட்டளியுங்கள்' என, சிரித்து சமாளித்தார்.'
பல ஆண்டுகளாக , எனக்கு இரட்டை இலை சின்னத்தில் ஓட்டளித்த பழக்கத்திற்கு இப்படி கூறுகின்றனர்' என்றார். ஆனால், இப்படிப்பட்ட மக்களிடம் எப்படி சுயேச்சை சின்னத்தை கொண்டு சேர்ப்பது என, அவரது கட்சியினர் புலம்பி வருகின்றனர்.