அதிமுகவில் இணையப்போவதாக வந்த செய்தியில்  எந்தவிதமான உண்மையும் இல்லை என அமமுக கொள்கைப் பரப்புச் செயலாளர்  தங்க தமிழ்ச்செல்வன் அதிரடியாக தெரிவித்துள்ளார் 

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் தேனி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்டவர் தங்க தமிழ்ச்செல்வன். இவர் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.களில் ஒருவர். 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

நேற்று தனியார் தொலைக்காட்சியின் நிகழ்ச்சியில் பேசிய அவர், தினகரனின் அமமுக கட்சியை மக்கள் ஏற்கவில்லை என்று கூறினார். இரட்டை இலை சின்னத்தை மீட்பதற்காகவே கட்சி ஆரம்பித்தோம். ஆனால் மக்கள் நாங்கள் தனி சின்னம் பெற்று போட்டியிட்டதை ஏற்கவில்லை என்றும் கூறினார்.

மேலும் அவ்ர் தேனி தொகுதியை பொறுத்தவரை தேர்தல் மின்னணு இயந்திரத்தில் எந்த பிரச்சினையும் இல்லை சரியாக தான் இருந்தது என்று தெரிவித்தார். எடப்பாடி பழனிச்சாமி அரசை வழக்கமாக எதிர்க்கும் தங்க தமிழ்ச்செல்வன் அந்த பேட்டியில் அதிமுக அரசு பிளாஸ்டிக்கை ஒழித்தது வரவேற்கத்தகக்து என்று கூறினார். தங்க தமிழ்ச்செல்வனின் இந்த பேட்டியின் மூலம் விரைவில் அதிமுகவில் இணைவார் என்று பரவாலக செய்திகள் வெளியாகின.

இந்நிலையில், தங்க தமிழ்ச்செல்வன் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசினார். நான் அதிமுகவில் இணையப்போவதாக வந்த செய்தியில் உண்மையில்லை. சிலர் வேண்டுமென்றே, இதுபோன்ற உண்மைக்கு மாறான தகவல்களை பரப்பி வருகின்றனர் என்று விளக்கம் அளித்துள்ளார்.