தூத்துக்குடியில் வேல் முருகன் கைது…. சுங்கச் சாவடி தாக்கப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டதாக சொல்லுது போலீஸ்…
தடையை மீறி தூத்துக்குடிக்கு சென்ற தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல் முருகனை போலீசார் கைது செய்தனர். உளுந்தூர் பேட்டை சுங்கச்சாவடி தாக்கப்பட்ட வழக்கில் அவரை கைது செய்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த 22-ந் தேதி நடைபெற்ற போராட்டத்தின் போது கலவரம் வெடித்தது. அப்போது போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 13 பேர் பலி ஆனார்கள். மேலும் பலர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்..
இந்த சம்பவம் தொடர்பாக பல்வேறு கட்சியினரும், அமைப்புகளும் போராட்டம் நடத்தி வருகின்றனர். திமுக மற்றும் எதிர்கட்சிகள் சார்பில் நேற்று முழு அடைப்புப் போராட்டம் நடைபெற்றது, . இதனால் மாநிலம் முழுவதும் பெரும்பாலான பகுதிகளில் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.
இது தவிர மாநிலம் முழுவதும் ஆங்காங்கே அரசியல் கட்சியினரும், சமூக ஆர்வலர்களும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் காயமடைந்தவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூற தமிழக வாழ்வுரிமை கட்சித்தலைவர் வேல்முருகன் தடையை மீறி தூத்துக்குடி சென்றார்.
அப்போது விமானநிலையத்தில் காத்திருந்த விழுப்புரம் போலீசார் அவரை கைது செய்தனர். பின்னர் அவரை திருமணம் ஒன்றில் தங்க வைத்துள்ளனர்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி கடந்த ஏப்ரல் 1 ஆம் தேதி உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியை தாக்கியதாக தொடரப்பட்ட வழக்கில் வேல்முருகன் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.