“ஏட்டிக்கு போட்டி...” ஓ.பி.எஸ்.சை அடுத்து நஜீமை தம்பிதுரை சந்திக்கிறார் - இரட்டை இலை யாருக்கு...?
ஜெயலலிதா மறைவுக்கு பின் ஆர்கே நகர் தொகுதி காலியாக இருந்தது. இதையடுத்து அந்த தொகுதிக்கான இடைத் தேர்தல் அடுத்த மாதம் 12ம் தேதி நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.
இதற்கிடையில் அதிமுகவில் சசிகலா, பன்னீர்செல்வம் என இரு அணிகளாக பிரிந்து தேர்தலை சந்திக்க தயாராகிவிட்டனர். மேலும், ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, 3வது அணியாக உருவாகி இருக்கிறார். இதனால், அதிமுகவில் பெரும் குழப்பம் நிலவி வருகிறது.
தற்போது ஆர்கே நகர் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளருக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்திடம் முறையிட்டுள்ளனர்.
ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர், சசிகலாவை பொது செயலாளராக அறிவித்தது செல்லாது. அதற்கு விதிகளில் இடமில்லை என கூறி, தங்களுக்கே இரட்டை இலை சின்னம் தரவேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். இதற்கான மனுவை நேற்று கொடுத்தார்.
இதை தொடர்ந்து, இன்று மதியம் 11 மணிக்கு மாநிலங்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தலைமையில் அதிமுக எம்பிக்கள் தேர்தல் ஆணையரை டெல்லியில் சந்திக்கின்றனர். அப்போது, இரட்டை இலை சின்னத்தை தங்களுக்கே தரவேண்டும் என கோரிக்கை விடுக்க உள்ளனர்.