மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன் ஆதரவாளர்கள், மணிப்பூர் மாதிரியே உனக்கும் சேலையை உருவணுமா? என்று மிரட்டியதோடு சேலையை பிடித்து இழுக்க முற்பட்டதாக கூறப்படுகிறது.

தென்காசி திமுக தெற்கு மாவட்ட பொறுப்பாளராக இருந்த சிவபத்மநாதனை அப்பொறுப்பில் இருந்து விடுவித்து அவருக்கு பதிலாக புதிய மாவட்ட பொறுப்பாளர் நியமிக்கப்படுவதாக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

தென்காசி மாவட்ட திமுகவை நிர்வாக வசதிக்காக தெற்கு, வடக்கு என இரண்டாக பிரிக்கப்பட்டது. அதன்படி தென்காசி தெற்கு மாவட்ட திமுகவுக்கு சிவபத்மநாதன் மாவட்டச் செயலாளராக உள்ளார். தென்காசி வடக்கு மாவட்ட திமுக எம்எல்ஏ ராஜா மாவட்டச் செயலாளராக உள்ளார். இந்நிலையில், மணிப்பூர் வன்கொடுமையை கண்டித்து திமுக மகளிரணி சார்பில் தென்காசியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் திமுக மாவட்ட பெண் சேர்மன் தமிழ்செல்வியை மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன் பேசவிடாமல் தடுத்ததாகக் கூறப்படுகிறது. 

இதையும் படிங்க;- "மணிப்பூர் மாதிரியே உனக்கும் சேலையை உருவணுமா?" மேடையிலேயே திமுக பெண் சேர்மனுக்கு நடந்த கொடுமை!

இதனால் ஆத்திரமடைந்த தமிழ்செல்வி மணிப்பூர் வன்கொடுமையை கண்டித்து போராடுகிறோம், அதற்கும் இங்கு நடப்பதற்கும் என்ன வித்தியாசம்? என்று கோபத்துடன் மாவட்ட பெண் சேர்மன் கேள்வி எழுப்பி உள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன் ஆதரவாளர்கள், மணிப்பூர் மாதிரியே உனக்கும் சேலையை உருவணுமா? என்று மிரட்டியதோடு சேலையை பிடித்து இழுக்க முற்பட்டதாக கூறப்படுகிறது.

மாவட்ட பெண் சேர்மன் கையில் வைத்திருந்த மைக் பிடுங்கப்பட்டு அவர் பின் வரிசைக்கு தள்ளப்பட்டது அல்லாமல் சிவபத்மநாதன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் காவலரை வைத்து மாவட்ட பெண் சேர்மனை மேடையை விட்டு கீழே இறக்கிவிட்டுள்ளனர். இதுதொடர்பான புகார் திமுக தலைமைக்கும் சென்றது. இதனையடுத்து, மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்து சிவபத்மநாதன் விடுவிக்கப்பட்டுள்ளார். 

இதையும் படிங்க;- அரசியல்வாதிகள் ஆக்கிரமித்த நிலங்களை மீட்க வக்கில்ல.. அப்பாவி மக்கள் வாழும் இடங்களை இடிப்பதா? கொதிக்கும் சீமான்

இதுதொடர்பாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்;- தென்காசி தெற்கு மாவட்டக் கழக செயலாளராகப் பணியாற்றி வரும் பொ. சிவபத்மநாதன் அப்பொறுப்பிலிருந்து விடுவித்து அவருக்கு பதிலாக சுரண்டை நகரச் செயலாளராக பொறுப்பு வகித்து வரும் ஜெயபாலன் தெதன்காசி மாவட்ட கழகப் பொறுப்பாளராக நியமிக்கப்படுகிறார். 

ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்ட நிர்வாகிகள் இவருடன் இணைந்து பணியாற்றிட வேண்டுமென கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.