இந்த விஷயத்தில் தயவு தாட்சணை கிடையாது.. உடனடி ஆக்ஷன் தான்... அமைச்சர் கே.என்.நேரு சரவெடி..!
துறைவாரியாக வரும் புகார்கள் மீது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. முதல்வர் ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த போது, இந்த துறையில் நடந்துள்ள ஊழல் குறித்து ஆளுநரிடமும், நீதிமன்றத்திலும் புகார் கொடுத்தார்.
உள்ளாட்சித் தேர்தலைப் பொருத்தவரை, மாநகராட்சியில் உள்ள மக்கள் தொகைக்கு ஏற்றார்போல் வாக்காளர் பட்டியல் தயார் செய்யப்பட்டு வருகிறது என அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.
சென்னை தலைமைச் செயலகத்தில், நகர்ப்புற வளர்ச்சித் துறை சார்பில் இன்று ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதனையடுத்து, நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என்.நேரு செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்;- துறைவாரியாக வரும் புகார்கள் மீது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. முதல்வர் ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த போது, இந்த துறையில் நடந்துள்ள ஊழல் குறித்து ஆளுநரிடமும், நீதிமன்றத்திலும் புகார் கொடுத்தார். இதுதொடர்பாக லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணை நடந்து வருகிறது. இதில் தவறு நடந்தது தெரிய வந்தால் நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும். கடந்த ஆட்சிக்காலத்தில் முறைகேடாக டெண்டர்கள் போடப்பட்டது கண்டறியப்பட்டால் ரத்து செய்யப்படும். ஏற்கனவே சென்னையில் 120 கோடி ரூபாய் மதிப்பிலான டெண்டர் ரத்து செய்யப்பட்டுள்ளது.
உள்ளாட்சித் தேர்தலைப் பொருத்தவரை, மாநகராட்சியில் உள்ள மக்கள் தொகைக்கு ஏற்றார்போல் வாக்காளர் பட்டியல் தயார் செய்யப்பட்டு வருகிறது. புதிய மாநகராட்சி நகராட்சியை உருவாக்குவோம் என்று தேர்தல் அறிக்கையில் கூறியிருக்கிறோம். அப்படி உருவாக்கப்பட்டால், இதில் சில மாற்றங்கள் ஏற்படும். இதையும் நாங்கள் கணக்கில் எடுக்க வேண்டும்.
ஏற்கனவே ஊரக பகுதிகளில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் 5 ஆண்டுகள் பதவிக்காலம் அப்படியே இருக்கும். புதிதாகத் தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் அடுத்த 5 ஆண்டுகளுக்கு பணியாற்றுவார்கள். தேர்தல் மாறி மாறிதான் நடைபெறும். எத்தனை மாநகராட்சிகள் நகராட்சிகள் உருவாக்கப்படும் என்று முதல்வர் தான் அறிவிப்பார் என கே.என்.நேரு கூறியுள்ளார்.