மக்கள் பிரச்னைன்னு போராடி என்றாவது ஜெயிலுக்குப் போயிருக்கீங்களா..? நடிகர்களுக்கு மதுசூதனன் கேள்வி
சினிமா நடிகர்கள் என்றைக்காவது மக்களின் பிரச்னைக்காக போராடி சிறை சென்றுள்ளார்களா...? இப்படி ஒரு கேள்வியை எழுப்பியுள்ளார் அதிமுக அவைத் தலைவர் இ.மதுசூதனன்.
கடலூருக்கு வந்திருந்த மதுசூதனன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவரிடம், கமல் ஹாசன் திடீரென எண்ணூருக்கு வந்து பார்வையிட்டது, விஜய் அரசியல் என்று நடிகர்களின் அரசியல் குறித்து கேள்வி எழுப்பப் பட்டது. அதற்கு அவர், “அரசியலுக்கு வருவேன் என்று சொல்லும் எந்த நடிகராவது, மக்கள் பிரச்னைகளுக்காப் போராடியுள்ளார்களா? அல்லது அவர்களின் அடிமட்ட தொண்டர்களின் பிரச்னைகளுக்காகவாவது போராடி சிறைக்குச் சென்றிருக்கிறார்களா?
சிறைகுச் செல்வது என்பது அரசியலுக்கான அடிப்படைத் தகுதி இல்லைதான். ஆனாலும், எந்த விதமான போராட்டத்திலும் ஈடுபடாமல், அரசியலில் ஈடுபடுவதாக அவர்கள் சொல்லிக் கொண்டிருக்கின்றனர்.” என்று பதிலளித்தார்.
தொடர்ந்து, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடுவீர்களா என்று செய்தியாளர்கள் கேள்வி கேட்டனர். அதற்கு அவர், “ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து கட்சித் தலைமை எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுவேன்.” என்றார்.
மேலும், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருக்கு இடையே உரசல்கள் இருப்பதாகக் கூறப்படுவது குறித்தும், இரட்டை இலை சின்னம் மீட்பு குறித்தும் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு அவர், “நான்தான் அதிமுக., என்று கூறிவரும் தினகரனிடம் அதிமுக., உறுப்பினர் அட்டை உள்ளதா. அவர் கட்சிக்கு துரோகம் விளைவிக்கிறார் என்பதை ஜெயலலிதா உணர்ந்துக் கொண்டதால்தான் அவரை கட்சியிலிருந்து நீக்கினார். மேலும், நாடாளுமன்றத்துக்கும் செல்ல வேண்டாம் என்று உத்தரவிட்டார். உண்மையான அதிமுக., முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரது ஒருங்கிணைப்பில் செயல்படுகிறது. எனவே, எங்களுக்கே இரட்டை இலை சின்னம் கிடைக்கும். அதன்பிறகு, தற்போது இருக்கும் மனக் கசப்புகள் நீங்கி அனைவரும் ஒற்றுமையாக இருப்பார்கள்” என்று கூறினார் மதுசூதனன்.