பெரு நிறுவனங்களுக்கு 28 ஆண்டுகளில் இல்லாத வரிச்சலுகை: நாடாளுமன்றத்தில் மசோதாவை நிறைவேற்றியது மத்திய அரசு...
பெருநிறுவனங்களுக்கா வரியை 28 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 10 சதவீதம் வரை மத்திய அரசு கடந்த செப்டம்ரில் குறைத்தது. தற்போது அதனை சட்டமாக்க நாடாளுமன்ற மக்களவையில் மசோதாவை தாக்கல் செய்து நிறைவேற்றப்பட்டுள்ளது.
நம் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 6 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடும் சரிவை சந்தித்தது. இதனையடுத்து உள்நாட்டில் முதலீட்டு நடவடிக்கைகளை ஊக்குவிக்க, வேலைவாய்ப்பை பெருக்க மற்றும் மந்தகதியில் இருக்கும் பொருளாதாரத்தில் மறுமலர்ச்சி ஏற்படுத்தவும் கடந்த செப்டம்பரில் பெருநிறுவனங்களுக்கான வரியை மத்திய அரசு அதிரடியாக குறைத்தது.
கடந்த 28 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பெறு நிறுவனங்களுக்கான வரியை 10 சதவீதம் வரை மத்திய அரசு குறைத்தது. இதனால் மத்திய அரசுக்கு ரூ.1.45 லட்சம் கோடி அளவுக்கு வரி வருவாய் பாதிக்கும். இருந்தாலும் பொருளாதார வளர்ச்சியை கருத்தில் கொண்டு வரி குறைப்பு நடவடிக்கையை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மேற்கொண்டார்.
நிறுவன வரி குறைப்புக்காக அவசர சட்டம் கொண்டு வரப்பட்டு அது குடியரசு தலைவரால் பிரகடனப்படுத்தப்பட்டது. இந்நிலையில், நாடாளுமன்ற மக்களவையில் நேற்று பெறுநிறுவன வரி குறைப்பு நடவடிக்கையை சட்டமாக்க, அவசர சட்டத்துக்கு மாற்றாக வரிவிதிப்பு சட்டங்கள் (திருத்த) மசோதாவை (2019) மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.
மக்களவையில், விவாதத்துக்கு பின் அந்த மசோதா நேற்று நிறைவேற்றப்பட்டது. தற்போது உள்ள பெறுநிறுவனங்களுக்கான வரி 30 சதவீதத்திலிருந்து 22 சதவீதமாகவும், 2019 அக்டோபர் 1ம் தேதிக்கு பிறகு 2023 மார்ச் 31ம் தேதிக்குள் புதிதாக தொடங்கி செயல்பாட்டுக்கு வரும் தயாரிப்பு நிறுவனங்களுக்கான வரி 25 சதவீதத்திலிருந்து 15 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.