சென்னையால் தமிழகத்தில் பரவிய கொரோனா... மேலும் பல மாவட்டங்களில் முழு ஊரடங்கு..? அரசு தீவிர பரிசீலனை.!
சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களை தொடர்ந்து மதுரை, திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களிலும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களை தொடர்ந்து மதுரை, திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களிலும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தினமும் 2500 என்ற அளவில் உள்ளது. சென்னையில் மட்டும் மிகப்பெரிய அளவில் தொற்று இருந்த நிலையில், மாநிலத்தின் மற்ற பகுதிகளிலும் பரவலாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. அதிலும் குறிப்பாக மதுரை, திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை ஜெட் வேகத்தில் உயர்ந்து கொண்டே செல்கிறது. இதனால் சென்னையில் அமல்படுத்தப்பட்ட போன்று முழு ஊரடங்கை அமல்படுத்தினால் சரியாக இருக்கும் என கூறிவருகின்றனர்.
இதனிடையே, திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இதனால் திருவண்ணாமலை தாலுகா வியாபாரிகள் சங்கத்தினர் தற்காப்பு நடவடிக்கையின் காரணமாக கடைகள், வணிக நிறுவனங்களை 10 நாட்கள் மூட முடிவு செய்தனர். அதன்படி, நேற்று திருவண்ணாமலை நகரில் பெரும்பாலான கடைகள் மூடப்பட்டிருந்தன.
அதேபோல், மதுரை மாவட்டத்தில் கடைகள் திறப்பு நேரம் குறைக்க அனைத்து வியாபாரிகள் சங்க கூட்டத்தில் முடிவு செய்துள்ளனர். நாளை மறுநாள் முதல் காலை 6 முதல் மதியம் 2 மணி வரை மட்டுமே கடைகள் இயங்கும் எனவும் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தியது போல மதுரை, திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்த அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட மாவட்ட நிர்வாகங்களின் கோரிக்கையை அடுத்து முடக்கத்திற்கு அரசு பரிசீலனை செய்து வருவதாக தெரிகிறது. தற்போதைய சூழலில் கொரோனாவைக் கட்டுப்படுத்த எதையாவது செய்யுங்கள், கொரோனா அழிந்தால் போதும் என்ற மனநிலைக்கு மக்கள் வந்துவிட்டனர்.