நீட் தேர்வு விவகாரம் – தமிழக அரசுக்கு ஸ்டாலின் கண்டனம்….
நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் எம்.பி.பி.எஸ் சேர்க்கை நடத்த இருப்பதற்கு திமுக செயல்தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மருத்துவ படிப்பு படிக்க மாணவ மாணவியர்கள் நீட் தேர்வு என்ற புதிய தேர்வை எழுத வேண்டும் என மத்திய அரசு ஆணை பிறப்பித்தது. ஆனால் அதற்கு தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.
மாணவர்கள் தரப்பில் இருந்து நீதிமன்றத்தில் வழக்குகள் குவிந்த வண்ணம் இருந்தன. ஆனால் கடும் எதிர்ப்பையும் மீறி மே 7 ஆம் தேதி மத்திய அரசு நீட் தேர்வை நடத்தி முடித்தது.
இந்நிலையில் நேற்று முன்தினம் நீட் தேர்விற்கான முடிவுகள் வெளியிடப்பட்டன. இதில், முதல் 25 இடங்களைப் பிடித்த மாணவர்கள் பட்டியலில் தமிழகத்தைச் சேர்ந்த எந்த ஒரு மாணவ மாணவியும் இடம் பிடிக்கவில்லை.
இதை தொடர்ந்து சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், மாநில பாடதிட்டத்தில் பயின்ற மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு 4.2 லட்சம் மாணவர்களுக்கு 85 % உள் இடஒதுக்கீடு செய்யபட்டுள்ளதாக தெரிவித்தார்.
இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த ஸ்டாலின் நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் எம்.பி.பி.எஸ் சேர்க்கை நடத்த இருப்பதற்கு கடும் கண்டனம் தெரிவித்தார்.
நீட் தேர்வுக்கு விலக்கு பெறுவதில் அடைந்த தோல்வியை மறைக்கவே அரசு திசை திருப்புவதாகவும், தமிழக மாணவர்களை ஏமாற்றும் மோசடி செயலை ஏற்க முடியாது எனவும் குறிப்பிட்டார்.
பதவியை காப்பாற்ற தமிழக நலன்களை மத்திய அரசிடம் தமிழக அரசு அடகு வைப்பதாகவும், நீட்தேர்வு கிராமப்புற மாணவர்கள் மற்றும் மாநில உரிமைகளுக்கு எதிரானது எனவும் தெரிவித்தார்.
மேலும் சி.பி.எஸ்.இ பிரிவினருக்கு 15% இடங்கள் எந்த அடிப்படையில் ஒதுக்கப்பட்டுள்ளன என்றும் ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.