#BREAKING தமிழகத்தில் ஜூலை 31 வரை ஊரடங்கு நீட்டிப்பு... எதற்கெல்லாம் தடை நீடிக்கிறது தெரியுமா?
தமிழ்நாட்டில் தளர்வுகளுடன் கூடிய கட்டுப்பாடுகள் ஜூலை 3ம் தேதி வரை வரை நீட்டிகப்படுவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் தளர்வுகளுடன் கூடிய கட்டுப்பாடுகள் ஜூலை 3ம் தேதி வரை வரை நீட்டிகப்படுவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் 25ம் தேதி முதலே தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ். கொரோனா நோய்த் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த ஊரடங்கு நடைமுறையில் இருந்து வருகிறது. தற்போது தமிழ்நாட்டில் நடைமுறையில் உள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு 19-7-2021 அன்று காலை 6 மணியுடன் முடிவடையும் நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று உயர் அதிகாரிகள், மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தினார். இன்று காலை பிரதமர் மோடி பங்கேற்ற காணொலி காட்சி வாயிலான ஆலோசனை கூட்டத்திலும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். அப்போது கொரோனா நோய்த் தொற்று பரவலைக் குறைக்கத் தேவையான கட்டுப்பாடுகளை ஜூலை 31 வரை தொடர்ந்து அமல்படுத்த மத்திய அரசின் உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
இதனையடுத்து தமிழகத்தில் கொரோனா நோய்த் தொற்று நிலையைக் கண்காணித்து தொடர்ந்து கட்டுப்படுத்த வேண்டிய அவசியத்தை கருத்தில் கொண்டு ஜூலை 31ம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். அவசியமின்றி வீட்டிலிருந்து வெளியில் வருவதையும், கூட்டம் கூடுவதையும் தவிர்க்க வேண்டும் என்றும், பொது இடங்களில் முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியினை கடைபிடிப்பது, கைகளை அடிக்கடி சோப்பு / கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்வது ஆகியவற்றை கட்டாயம் பின்பற்றவும் முதலமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார்.
நோய்த்தொற்று அறிகுறிகள் தென்பட்டவுடன் பொதுமக்கள் உடனே அருகிலுள்ள மருத்துவமனைகளை நாடி மருத்துவ ஆலோசனை அல்லது சிகிச்சை பெறவும், கொரோனா நோய்த் தொற்று தடுப்பு மேலாண்மைக்கான விதிமுறைகள் குறித்த தொடர் விழிப்புணர்வை அனைத்து தரப்பினரிடமும் அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள்/சென்னை மாநகராட்சி ஆணையர் ஏற்படுத்தவும், அவைகள் கடைபிடிக்கப்படுவதை கண்காணித்து விதிமீறல்களில் ஈடுபடுவர்கள் மீது அபராதம் விதிக்கவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளவேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார். ஜூலை 31 வரை கீழ்காணும் நடவடிக்கைகளுக்கு அனைத்து மாவட்டங்களிலும் தடை தொடருவதாகவும் அறிவித்துள்ளார்.
• மாநிலங்களுக்கிடையே தனியார் மற்றும் அரசு பேருந்து போக்குவரத்து (புதுச்சேரி நீங்கலாக)
• மத்திய உள்துறை அமைச்சகத்தால் அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களைத் தவிர. சர்வதேச விமான போக்குவரத்து
• திரையரங்குகள்
• அனைத்து மதுக்கூடங்கள்
• நீச்சல் குளங்கள்
• பொது மக்கள் கலந்து கொள்ளும் சமுதாயம், அரசியல் சார்ந்த கூட்டங்கள்
• பொழுதுபோக்கு, விளையாட்டு, கலாச்சார நிகழ்வுகள்
• பள்ளிகள் மற்றும் கல்லூரிகள்
• உயிரியல் பூங்காக்கள்
• நோய்த் தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக திருமண நிகழ்வுகளில் 50 நபர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர்.
• இறுதிச் சடங்குகளில், 20 நபர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.