'தமிழக அரசு தீர்மானமெல்லாம் பூஜ்ஜியம் தான்'..! எழுவர் விடுதலையில் முரண்டு பிடிக்கும் மத்திய அரசு..!
மத்திய புலனாய்வு அமைப்பால் விசாரிக்கப்பட்ட 7 பேர் விடுதலையில் தமிழக அரசால் தன்னிச்சையாக முடிவெடுக்க முடியாது என மத்திய அரசு தற்போது தெரிவித்துள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு, ' 7 பேர் விடுதலையில் தமிழக அரசின் கோரிக்கையை நிராகரித்து விட்டதாக கூறியுள்ளது. உச்சநீதிமன்ற உத்தரவுப்படியே ஆயுள் தண்டனை அளிக்கப்பட்டுள்ளதாகவும் அதை சட்டவிரோத காவல் என கருத முடியாது எனவும் கூறியுள்ளனர்.
முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு பேரிரறிவாளன் உட்பட 7 பேர் கடந்த 28 ஆண்டுகளாக சிறையில் இருக்கின்றனர். அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என தமிழகத்தில் பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் தொடர்ச்சியாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 7 பேர் விடுதலைக்கான நகர்வை சட்டமன்றத்தில் முன்னெடுத்தார்.
அவர் மறைவுக்கு பிறகு தற்போதைய அதிமுக அரசு அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பியுள்ளது. ஆளுநருக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு பல மாதங்கள் கடந்து விட்ட நிலையில் இப்போது வரையிலும் எந்த முடிவையும் ஆளுநர் அறிவிக்கவில்லை. பல்வேறு தரப்பினரும் 7 விடுதலையை ஆளுநர் உடனடியாக அறிவிக்க வேண்டும் என தொடர்ச்சியாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்தநிலையில் மத்திய புலனாய்வு அமைப்பால் விசாரிக்கப்பட்ட 7 பேர் விடுதலையில் தமிழக அரசால் தன்னிச்சையாக முடிவெடுக்க முடியாது என மத்திய அரசு தற்போது தெரிவித்துள்ளது. சட்டவிரோத காவலில் வைத்திருப்பதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் நளினி தொடர்ந்திருக்கும் வழக்கு விசாரணையில் மத்திய அரசு, ' 7 பேர் விடுதலையில் தமிழக அரசின் கோரிக்கையை நிராகரித்து விட்டதாக கூறியுள்ளது. உச்சநீதிமன்ற உத்தரவுப்படியே ஆயுள் தண்டனை அளிக்கப்பட்டுள்ளதாகவும் அதை சட்டவிரோத காவல் என கருத முடியாது எனவும் மத்திய அரசு சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.. மத்திய அரசு ஒப்புக்கொள்ளும் வரையிலும் தமிழக அரசின் விடுதலை தீர்மானம் பூஜ்ஜியம் தான் எனவும், நளினியின் ஆட்கொணர்வு மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
'மிகுந்த வேதனை அளிக்கிறது'..! திருப்பூர் விபத்தில் பலியானவர்களுக்கு பிரதமர் இரங்கல்..!