குஷ்புவை பார்க்க வந்த ‘முகுல்’ குமரி அனந்தனை பார்கலையே ஏன்?... உச்சகட்ட கோபத்தில் தமிழக காங்கிரசார்...
குஷ்புவுக்கென்று தனி ராசியுண்டு. அவர் கம்முன்னு இருந்தாலும் அவரை சுற்றி ஒரு பஞ்சாயத்து ஓடிக் கொண்டே இருக்கும். அதுமட்டுமில்லாமல் குஷ்புவுடன் நட்பு வைத்திருப்பவர்களுக்கும் சில சிக்கல்களை கொண்டு வரும்.
அந்த வகையில் லேட்டஸ்டாய் காங்கிரஸ்காரர்களாலேயே கழுவிக் கழுவி ஊற்றப்படுகிறார் முகுல் வாஸ்னி.
தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளரான முகுல் வாஸ்னிக் கடந்த சனிக்கிழமையன்று வேலூரில் நடந்த கட்சி பொதுக்கூட்டத்தில் கலந்திருக்கிறார். பின் சென்னையிலுள்ள ஒரு நட்சத்திர ஹோட்டலில் தங்கியிருக்கிறார். நேற்று காலை தேனாம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்றவர் அங்கு வயிற்றிலிருந்த கட்டிக்காக அறுவை சிகிச்சை செய்யப்பட்டு அனுமதிக்கப்பட்டிருக்கும் குஷ்புவை பார்த்து குசலம் விசாரித்தவர் அப்படியே ஜூட் ஆகிவிட்டார்.
இது சீனியர் மற்றும் இளங்கோவன் டீம் அல்லாத காங்கிரஸ்காரர்களை கன்னாபின்னாவென கடுப்பாக்கிவிட்டது. காரணம், தி.மு.க.வில் கோலோச்சிவிட்டு ஏதோ உள்குத்து பிரச்னையால் காங்கிரஸினுள் நுழைந்து, வந்த வேகத்தில் பதவி பெற்று கோலோச்சும் நவநாகரிக குஷ்பு மீது முகுல் வாஸ்னிக் அக்கறை வைத்திருக்கிறார். ஆனால் தமிழகத்தில் காங்கிரஸை தூக்கி நிறுத்த தோள் கொடுத்து, இன்று வரை கதர், மதுவிலக்கு, பாரதமாத என்று தள்ளாத வயதிலும் தேசத்துக்காக பாடுபடும் குமரி அனந்தனை சந்திக்கவில்லையே என்பதுதான். மூத்த தலைவரான குமரி அனந்தன் வீட்டில் இருந்தாலு கூட இந்த விமர்சனம் வந்திருக்காது. ஆனால் அவர் இருப்பதோ ராயப்பேட்டையில் உள்ள அரசு பொது மருத்துவமனையில். இதுதான் வாஸ்னிக்கை ஆளாளுக்கு வறுத்தெடுக்க வழிசெய்துவிட்டது.
முகுல் வாஸ்னிக்கின் இந்த பாரபட்ச புத்தியை பற்றி கையோடு ராகுல் காந்திக்கு புகாரை மெயில் செய்திருக்கிறார்கள். அதில் நம் இயக்கத்தை சேர்ந்த எல்லோருமே சரிசமமாக பாவிக்கப்பட வேண்டியவர்களே. ஆனால் பாரபட்சம் காட்டுவது என்று முடிவெடுத்துவிட்டால், நம் இயக்கத்துக்கு தேவை குமரி அனந்தனா அல்லது குஷ்புவா? குமரியாரின் மூலம் சீனியர் சிட்டிசன்களின் வாக்கை வளைக்க முடியும், ஆனால் குஷ்பு சொல்லி காங்கிரஸுக்கு எத்தனை பேர் ஓட்டு போடுவார்கள்? என்று பொறி பறக்க கேட்டிருக்கிறார்கள் அந்த புகாரில். இதற்கு கூடிய விரைவில் முகுல் மீது ராகுல் பஞ்சாயத்தை நடத்துவார் என்று தகவல்.
இந்த விவகாரம் முகுல் வாஸ்னிக்கின் கவனத்துக்கு போக மனிதர் மண்டைகாய்ந்துவிட்டாராம்!