'திமுகவை விட காங்கிரஸ் அதிக முறை வெற்றி..' அதனால் எங்களுக்கே சீட்.. திமுகவினரை கடுப்பாக்கிய 'வேலுச்சாமி'
‘திருச்சி மாநகரில் திமுகவை விட காங்கிரஸ் அதிக இடங்களில் வென்றுள்ளோம்’ என்று காங்கிரஸ் கட்சியின் மாநில செய்தி தொடர்பாளர் வேலுச்சாமி கூறியுள்ளார். இது திருச்சி திமுகவினரிடையே சலசலப்பை உண்டாக்கி இருக்கிறது.
தமிழகத்தில் நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடக் கூடிய அரசியல் கட்சிகள் தனது கூட்டணி கட்சிகளுடன் ஆலோசனை நடத்தி போட்டியிடக்கூடிய இடங்கள் குறித்து பங்கீடு நடைபெற்று வருகிறது. அந்த வகையில் திருச்சியில் திமுக அதன் கூட்டணிக் கட்சிகளுடன் ஆலோசனை நேற்று நடத்தியது.
காங்கிரஸ் கட்சியினருக்கு ஒரு சில இடங்கள் மட்டுமே போட்டியிட திமுக கூட்டணி அறிவிக்கப்பட்டது என தகவல் வெளியானது. இதனையடுத்து அது சம்பந்தமாக காங்கிரஸ் கட்சியின் மாநில செய்தி தொடர்பாளர் வேலுச்சாமி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள அருணாச்சலம் மன்றத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசும் போது, ‘ காங்கிரஸ் கட்சி திமுகவிடம் இதுவரை எத்தனை தொகுதிகள் வேண்டும் என கேட்கவில்லை.
திருச்சி மாநகரை பொறுத்தவரை உள்ளாட்சி தேர்தலை பொறுத்தவரை காங்கிரஸ் கட்சி திமுகவை விட அதிக முறை வென்றுள்ளது அதிக இடங்களை கைப்பற்றியுள்ளது. மூன்று முறை மேயர் பதவி வெற்றி பெற்றுள்ளது. ஆனால் காங்கிரஸ் கட்சி மிக அதிகமான இடங்களை எதிர்பார்க்கிறது. இது குறித்த பேச்சுவார்த்தையில் திமுகவிடம் தொடர்ந்து ஈடுபடுவோம் என கூறினார். வேலுசாமியின் இந்த கருத்து திருச்சி திமுகவினரிடையே சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.அதுமட்டுமின்றி காங்கிரஸ் திமுக கூட்டணியில் அதிக சீட்களை கேட்பதால்,அவர்கள் கேட்ட சீட்களை தருமா ? என்ற கேள்வியும் எழுந்து இருக்கிறது.