"ஆளுநர் தலைமைச் செயலாளர் திடீர் சந்திப்பு - "சட்டம் ஒழுங்கு குறித்து விவாதித்ததாகத் தகவல்"
பரபரப்பான தமிழக அரசியல் சூழ்நிலையில் பொறுப்பு ஆளுநரை தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் திடீரென சந்தித்து பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அதிரடி சரவெடியாக தமிழக அரசியலில் நித்தம் நித்தம் அதிரி புதிரி திருப்பங்கள் அரங்கேறி வருகின்றன. காலையில் ஓ.பி.எஸ். அணியில் இருப்பவர் மாலையில் ஈ.பி.எஸ். அணிக்கும். இரவில் ஈ.பி.எஸ். அணியில் இருப்பவர் விடிந்தால் ஓ.பி.எஸ். அணிக்கும் தாவக் கூடிய சூழல் தற்போது நிலவி வருகிறது. போதாத குறைக்கு சட்டமன்ற உறுப்பினர்களும் தன் பங்குக்கு முதல் அமைச்சரை நேரில் சந்தித்து கோரிக்கை மனுக்களை நேற்று அளித்து பரபரப்பு கூட்டினர்.
இப்படி யாருமே ஊகிக்க முடியாத படி அசரடிக்கும் அரசியல் டுவிஸ்ட்டுகளுக்கு மத்தியில் நிலைமையை சமாளிப்பது குறித்து முதல் அமைச்சர் எடப்பாடி தலைமையில் இன்று அமைச்சரவைக் கூட்டம் இன்று நடைபெற்றது.
அப்போது புதிய திட்டங்கள், மற்றும் எம்.எல்.ஏ.க்களின் கோரிக்கைகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.இந்தச் சூழலில் தமிழக பொறுப்பு ஆளுநர் விச்யாசாகர் ராவை, தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் சந்தித்து பேசியுள்ளார்.
அப்போது தமிழகத்தில் நிலவும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை குறித்து தலைமைச் செயலாளரிடம் ஆளுநர் வித்யாசாகர் கேட்டறிந்ததாகக் கூறப்படுகிறது.