பாஜகவில் வேட்பாளர் இல்லையா..? இப்போ பாருங்க 'அண்ணாமலை' ஆட்டத்த.. பக்க பிளானில் களமிறங்கும் பாஜக !!
தமிழகத்தில் கடந்த மூன்று ஆண்டுகளாக இணைந்து தேர்தலைச் சந்தித்து வந்த அதிமுக - பாஜக நடக்கவிருக்கிற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் தனித்தனியாக களமிறங்குகின்றன.
மாநில அளவில் இரண்டு கட்சிகளின் முக்கிய நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்தியும் சுமூக முடிவு எட்டப்படாததால், தனித்துப் போட்டியிடுவதாக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை அறிவித்தார். அதேவேளை, பேச்சுவார்த்தைகள் முடிவதற்கு முன்பாகவே வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு பாஜகவுக்கு அதிர்ச்சி கொடுத்திருந்தது அதிமுக. நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டி என்ற தமிழக பாஜகவின் அதிரடி முடிவு, அக்கட்சி தொண்டர்களை மட்டுமின்றி, அதிமுக விசுவாசிகளையும் மகிழ்ச்சியடைய வைத்துள்ளது.
இந்த தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு, தான் கட்சியின் தலைவராக பொறுப்பேற்று ஆறு மாதத்துக்கு பிறகு தமிழ்நாட்டில் தற்போது பாஜகவின் வெயிட் என்ன என்பதை அறிய அண்ணாமலை ஆசைப்பட்டுவிட்டதன் விளைவு தான் இதற்கு காரணம் என்கிறார்கள் பாஜகவினர். இதுகுறித்து பாஜக வட்டாரங்களில் விசாரித்தோம். ‘தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை பொறுப்பேற்ற பின், மாநிலம் முழுதும் சுற்றுப்பயணம் செய்து, கட்சியை பலப்படுத்தி வருகிறார்.
இளைஞர்கள் உட்பட பலரிடமும் ஆதரவு கிடைத்து வருகிறது. இதனால் பாஜக ஓட்டு சதவீதம் அதிகரித்துள்ளது.அதற்கு ஏற்ப நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில், அனைத்து மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளிலும் 30 சதவீத இடங்கள் ஒதுக்குமாறு, அ.தி.மு.க.,விடம் பேச்சு நடத்தப்பட்டது. அக்கட்சி, 10 சதவீதம் மட்டுமே வழங்குவதாக தெரிவித்தது.
தொடர்ந்து அடுத்தகட்ட பேச்சு நடத்தினால் கூடுதலாக, 5 சதவீத இடங்களை வழங்க அதிமுக தயாராக இருந்தது. அந்த இடங்களில் பாஜக வேட்பாளர்களை நிறுத்தினாலும், அதிமுகவினர் முழு ஒத்துழைப்பு வழங்குவரா என்பது தெரியாது.வரும் லோக்சபா தேர்தலுக்கு முன் கட்சியை பலப்படுத்த, நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில், அதிமுக ஒதுக்கிய இடங்களை ஏற்காமல், பாஜக தனித்து போட்டியிடுவது தான் நல்லது என, மாநில தலைவர் அண்ணாமலை முடிவெடுத்தார்.
பாஜகவுக்கு தமிழகம் முழுதும் தொண்டர்கள் இல்லை என்று, திராவிட கட்சிகள் கூறும் நிலையில், இதனை முற்றிலும் உடைக்க வேண்டும் என்பது அண்ணாமலையின் எண்ணம். வெற்றி, தோல்வி எதுவாக இருந்தாலும், 'மத்தியில் ஆட்சி செய்யும் பாஜக சார்பில், நாங்கள் தேர்தலில் போட்டியிடுகிறோம்' என்ற தன்னம்பிக்கையுடன், பாஜக வேட்பாளர்கள் வேலை செய்வர். அவர்கள் வாயிலாக ஓட்டுச்சாவடி முகவர்களும் கிடைப்பர். வேட்பாளர்கள் தங்கள் பகுதியில் பிரசாரத்தில் ஈடுபடும் போதும், மக்களை சந்திக்கும் போதும், மேலும் பலர் பாஜகவில் சேருவர்.
அனைத்து வார்டுகளிலும் தாமரை சின்னத்தை கொண்டு சேர்க்க முடியும். தேர்தல் முடிந்ததும், அவர்களை வைத்து கட்சி பணியாற்றுவதன் வாயிலாக, அடிமட்ட அளவில் கட்சி வளர்ச்சி பெறும். பாஜக தனித்து போட்டியிட்டால், திமுக - அதிமுகவுக்கு அடுத்து, பாஜக தான் பேசும் பொருளாக மாறும். தமிழக அரசியலில் பாஜக தவிர்க்க முடியாத சக்தியாக உருவெடுக்கும்’ என்ற கணக்கில் இருக்கிறார்கள் தமிழக பாஜகவினர். தமிழக அரசியலில் பாஜகவின் தாக்கம் எப்படி இருக்கும் என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.