திமுக ஆட்சிக்கு வந்து 8 மாதங்கள் ஆகியும், 8 வாக்குறுதிகளை கூட நிறைவேற்றவில்லை என்று  பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேசியிருக்கிறார்.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் அறிமுக கூட்டம் திருச்செந்தூர் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, ‘உள்ளாட்சி தேர்தலில் மத்திய அரசின் செயல்திட்டங்களால் பாஜக வேட்பாளர்களை மக்கள் வரவேற்க தயாராக உள்ளார்கள்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

நீட் தேர்வினால் பல்வேறு பகுதிகளிலும் ஏழை மாணவர்கள் மருத்துவம் படிப்பிற்கு சென்றுள்ளனர். திமுக நடத்த கூடிய மருத்துவக்கல்லூரியில் எந்த ஏழைக்கும் சீட் கொடுக்கவில்லை. பணம் பெற்றுதான் சீட் கொடுத்துள்ளனர் ஆனால் நீட் தேர்வினால் நிறைய இடங்களில் ஏழை மாணவர்கள் நீட் தேர்வு மூலம் மருத்துவ படிப்பிற்கு சென்றுள்ளார்கள் இதுதான் உண்மையான சமூக நீதி. 

நாடக கம்பெனியில் இருந்து வந்தவர்கள் ஆட்சியையும் நாடகம்போல் நடத்துகிறார்கள். திமுக ஆட்சிக்கு வந்த 8 மாதத்தில் அவர்கள் அளித்த 517 தேர்தல் வாக்குறுதிகளில் 8 தேர்தல் வாக்குறுதிகள் கூட முழுமையாக நிறைவேற்றவில்லை. தலைவரே இல்லாத கட்சி காங்கிரஸ் கட்சி. நாட்டின் எல்லா இடத்திலும் துரத்தப்பட்டு தமிழ்நாட்டில் தஞ்சம் புகுந்துள்ளது.

தமிழகத்தில் இந்தியை தினித்ததால் 1967-ல் தமிழகத்தில் இருந்து காங்கிரஸ் கட்சி துரத்தப்பட்டது. இலங்கைக்கு கட்சதீவை தாரை வார்த்து கொடுத்தது. இப்படி தொடர்ந்து தமிழகத்திற்கு துரோகம் செய்தது காங்கிரஸ் கட்சி. பாஜக குறித்து ராகுல் காந்தியும் சோனியா காந்தியும் பேசப்பேச கட்சியும் வளர்ந்தது, மோடி பிரதமர் வரை உயர்ந்தார். இதைப்போல் தற்போது ராகுல் காந்தியின் பார்வை தமிழகத்தின் மீது விழுந்துள்ளது. இதனால் 2026 நிச்சயம் பாஜக தமிழகத்தில் ஆட்சிக்கு வரும்’ என்று கூறினார்.