தாடி வைக்காத, தடி இல்லாத பெரியாராக முதல்வர் மு.க. ஸ்டாலின் இருக்கிறார் என்று சட்டப்பேரவை காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப் பெருந்தகை தெரிவித்தார். 

பெரியார் பிறந்த செப்டம்பர் 17-ஆம் தேதி ‘சமூக நீதி நாளா’க கொண்டாடப்படும் என சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இந்த அறிவிப்பை சட்டப்பேரவை விதி எண் 110-ன் கீழ் முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டு பேசுகையில், “இந்தியா முழுவதும் சமூக நீதி பரவ பெரியார் அளித்த அடித்தளமே காரணம். பெரியாரின் செயல்கள் குறித்து பேச வேண்டுமென்றால் 10 நாட்கள் அவையை ஒத்திவைத்துவிட்டு பேச வேண்டும். செப்டம்பர் 17-ஆம் தேதி சமூக நீதி நாளன்று அனைத்து அரசு அலுவலகங்களிலும் உறுதிமொழி மேற்கொள்ளப்படும்.


யாரும் எழுத தயங்கியதை எழுதிகாட்டியவர் பெரியார். யாரும் பேச தயங்கியதை பேசியவர் பெரியார். தமிழருக்கு எதிரான எல்லாவற்றையும் எதிரியாக கொண்டு செயல்பட்டவர் பெரியார். இதனால்தான் பெரியார் பிறந்த செப்டம்பர் 17 ஆம் தேதி சமூக நீதி நாளாக கொண்டாடப்படும். நாடாளுமன்றத்தின் வாசலுக்கே போகாதவர் பெரியார். ஆனால், இந்திய அரசியல் அமைப்பில் சட்டத்திருத்தம் அவரால் கொண்டுவரப்பட்டது.” என்று புகழாரம் சூட்டிப் பேசினார் முதல்வர் மு.க. ஸ்டாலின்.
முதல்வர் மு.க. ஸ்டாலினின் இந்த அறிவிப்பை சட்டப்பேரவை காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வபெருந்தகை வரவேற்று பேசினார். “பெரியாரின் பிறந்த நாளை சமூக நீதி நாளாக கொண்டாடப்படும் என்ற அரசின் அறிவிப்பை வரவேற்கிறேன். நமக்கெல்லாம் வழிகாட்டியாக இருந்தவர் பெரியார். இன்று பெரியார் இல்லாவிட்டாலும் தாடி வைக்காத, தடி இல்லாத பெரியாராக முதல்வர் ஸ்டாலின் இருக்கிறார்” என செல்வபெருந்தகை பேசினார்.