உடல்நலக் குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வரும் திமுக தலைவர் கருணாநிதி உடல் நலம் பெற்று மீண்டும் மக்கள் பணியை தொடர வேண்டும் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

திமுக தலைவர் கருணாநிதி திடீர் உடல் நலக் குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வருகிறார். அவர் தினமும் எடுத்துக் கொள்ளும் மருந்துகளில் ஒன்று ஒத்துக்கொள்ளாத நிலையில் அவருக்கு ஒவ்வாமை ஏற்பட்டு, அதனால் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் நேற்று திமுக தலைமை கழகம் அறிக்கை வெளியிட்டிருந்தது.
இந்த நிலையில், சில நாட்கள் அவர் ஓய்வெடுக்க வேண்டியுள்ளதால் பார்வையாளர்கள் சந்திப்பை தவிர்க்க வேண்டும் என்று அறிக்கையில் கூறப்பட்டிருந்தது. இந்த நிலையில், தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், கருணாநிதி உடல் நலம் பெற்று மீண்டும் மக்கள் பணியை தொடர வேண்டும் என வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியுள்ளதாவது:-
திமுக தலைவர் கருணாநிதிக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த செய்தியை கேட்டு மிகுந்த மன வேதனை அடைந்தேன். அவர் விரைவில் நலம் பெற இறைவனை வேண்டிக் கொள்கிறேன். கருணாநிதி விரைவில் நலம் பெற்று மீண்டும் மக்கள் பணியை தொடர வேண்டும்.
இவ்வாறு தமிழிசை சௌந்தரராஜன் தமது வாழ்த்து செய்தியில் கூறியுள்ளார்.
