tamilisai soundararajan resign BJP leader post
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் தோல்வி எதிரொலியாகத் தமிழக பாஜக தலைவர் பதவியை தமிழிசை ராஜினாமா செய்துவிட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை நிறுத்த வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை தொடர்ந்து கூறிவந்தார். ஆனால், தமிழிசையின் கோரிக்கை ஏற்கப்படாமல் இடைத்தேர்தல் நடைபெற்றது. ஆளுங்கட்சி வேட்பாளர், எதிர்கட்சி வேட்பாளர் என ஒட்டுமொத்தமாக தோற்கடித்து அபார வெற்றிபெற்றார் குக்கர் சின்னத்தில் போட்டியிட்ட தினகரன். பாஜக வேட்பாளர் கரு.நாகராஜன் நோட்டாவைவிட குறைவான வாக்குகளைப் பெற்று தோற்றுப்போனார்.
இது பல்வேறு தரப்பிலும் விமர்சனத்துக்கு உட்படுத்தப்பட்டது. ஆனால், இதற்கு விளக்கம் அளித்த தமிழிசை, ‘நோட்டா வாக்குகள் பாஜகவுக்கு மட்டும் எதிரானது கிடையாது. அனைத்துக் கட்சியினருக்கும் எதிரானது’ என்று விளக்கம் அளித்திருந்தார்.
இடைத்தேர்தலுக்கு முன்பாகவே தேசியத் தலைமைக்கு, “ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் நமக்குச் சாதகமான முடிவுகளைப் பெற்றுத் தராது. எனவே, இடைத்தேர்தலில் நாம் போட்டியிடுவது வீணானது” என்று தெரிவித்திருந்தாராம் தமிழிசை.
இருந்தாலும் மத்தியில் ஆட்சியில் உள்ள கட்சி என்பதால் போட்டியிட்டே ஆக வேண்டும் என தமிழிசைக்கு எதிரான பாஜக கோஷ்டி தலைவர்கள் நெருக்கடி கொடுத்தனர். இதையடுத்து வேட்பாளராக கரு.நாகராஜன் அறிவிக்கப்பட்டார். ஆனால், இடைத்தேர்தலில் பாஜக படுதோல்வியைச் சந்தித்தது.
இந்தத் தேர்தல் தோல்விக்கு தமிழிசை சௌந்தரராஜன் தான் காரணம் என்ற ரீதியில் எதிர்க் கோஷ்டியினர் டெல்லி தலைமையிடம் புகார் அளித்ததையடுத்து தேசியத் தலைவரின் அறிவுறுத்தலின்பேரில் தமிழிசை சௌந்தரராஜனிடம் ராஜினாமா கடிதம் பெறப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில் பாஜகவைச் சேர்ந்த வலைதளப் பதிவர் கல்யாண ராமன் என்பவர் தன்னுடைய முகநூல் பக்கத்தில், “டாக்டர் தமிழிசை அவர்கள் 27ஆம் தேதியே ராஜினாமா செய்துவிட்டதாக வரும் தகவல்கள் உண்மை என்றால் அவருக்கு எனது பாராட்டுகள்...” என்று குறிப்பிட்டுள்ளார்.

தனது மற்றொரு பதிவில், ஒரு சிறிய மாற்றுத் தகவல். “டாக்டர் தமிழிசை அவர்கள் ராஜினாமா செய்த தேதியை 28 என மாற்றிப் படிக்கவும்... ராஜினாமா உறுதி செய்யப்பட்ட தகவல்...” என்றும் குறிப்பிட்டுள்ளார். கல்யாண ராமனின் இந்த முகநூல் பதிவால் தமிழிசை சௌந்தரராஜனின் ஆதரவாளர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.
தனது முகநூலில் பதிவிட்ட சில மணி நேரங்களில் ஒரு முக்கிய அதிகாரி கேட்டுக்கொண்டதற்கு இணங்கி இந்த பதிவு நீக்கப்பட்டுள்ளது என மறுபடியும் ஒரு பதிவை போட்டுள்ளார். இப்படி தேசிய கட்சியிலுள்ள ஒருவரின் பதவியை எப்படி இந்த மாதிரி செய்வார்கள் என தொண்டர்களிடையே சலசலப்பு ஏற்பட்டுள்ளது.
