tamilisai soundararajan may be the bjp candidate in rk nagar by election
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜனே போட்டியிடப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த ஓராண்டாக காலியாக இருக்கும் ஆர்.கே.நகர் தொகுதிக்கு வரும் 21-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. திமுக, அதிமுக வேட்பாளர்கள், சுயேட்சையாக களமிறங்கும் தினகரன் உட்பட 21 பேர் நேற்றுவரை வேட்புமனு தாக்கல் செய்துவிட்டனர்.
ஆர்.கே.நகரில் பாஜக போட்டியிட்டால், நட்சத்திர வேட்பாளர்தான் போட்டியிடுவார் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்திருந்தார். ஆனால், கடந்த முறை போட்டியிட்ட கங்கை அமரன் இந்த முறை பின்வாங்கிவிட்டார். அவர் மட்டுமல்லாமல் மற்ற சிலரும் போட்டியிட தயங்கினர்.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிட வேண்டாம் என தமிழக பாஜக முடிவு செய்தது. ஆனால், தேசிய தலைவர் அமித் ஷாவோ, திமுக, அதிமுகவை விமர்சிக்க இந்த தேர்தல் சரியான வாய்ப்பு என்பதால் பாஜக போட்டியிட வேண்டும் என தெரிவித்துவிட்டார்.
இதையடுத்து போட்டியிட வேண்டிய கட்டாயத்தில் இருந்த பாஜகவிற்கு வேட்பாளரே கிடைக்கவில்லை. இந்நிலையில், வேறு வழியின்றி பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜனே ஆர்.கே.நகரில் போட்டியிடுவார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
இன்று மாலை அல்லது நாளை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
