tamilisai says Why should issue a notice on the Ammavasai day
அதான் உங்களுக்கு கடவுள் நம்பிக்கையே இல்லையே அப்புறம் எதற்கு எதற்காக அமாவாசை நள்ளிரவில் அரசியல் அறிவிப்பை வெளியிட வேண்டும் என கமல்ஹாசனுக்கு பாஜக தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.
நடிகர் கமல்ஹாசன் தான் அரசியலுக்கு வரப்போவதாக அறிவித்து அதற்கு முன்னோட்டமாக கடந்த சில தினங்களுக்கு முன்பு மையம் விசில் செயலியையும் அறிமுகப்படுத்தியிருந்தார். விரைவில்தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்யவுள்ளதாகவும் ஆனந்த விகடன் விருது வழங்கும் விழாவில் தெரிவித்தார்.
இதனையடுத்து கடந்த 16 ஆம் தேதி கமல் வெளியிட்ட அறிக்கையில் தாம் பிறந்த ராமநாதபுரத்தில் வருகிற பிப்ரவரி 21ஆம் தேதி தனது அரசியல் கட்சியின் பெயரை அறிவிக்கப்போவதாகவும் அங்கிருந்து அரசியல் பயணத்தை தொடங்கப்போவதாகவும் அறிவித்திருந்தார். மேலும் ராமநாதபுரம் அப்துல்கலாமின் இல்லத்தில் இருந்து அரசியல் பயணத்தை தொடங்கலாம் எனத் திட்டமிட்டுள்ளேன் என்றும் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில் நேற்று மதுரையில் பாஜக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், " கமல்ஹாசன், தனது அரசியல் பிரவேசத்தை அப்துல்கலாமின் சொந்த ஊரில் தொடங்குவது அவரது விருப்பம். பாஜகதான் அப்துல்கலாமை மதித்து ஜனாதிபதியாக்கியது.
ஆனால், தற்போது அப்துல்கலாமை அரசியலாக்க கமல்ஹாசன் முயற்சிக்கிறார். திராவிட அரசியல் நடத்துவேன் என்று கூறும் கடவுள் நம்பிக்கையில்லாத கமல்ஹாசன், எதற்காக நிறைந்த அமாவாசை இரவில் அரசியலுக்கு வரும் அறிவிப்பை வெளியிட வேண்டும்? என அடுத்தடுத்து கேள்விகளால் திணறடித்துள்ளார்.
