Tamilisai said Rajinikanth has commented on all issues
அனைத்து விஷயங்களிலும் குழப்பமின்றி தெளிவாக கருத்து தெரிவித்துள்ளார் நடிகர் ரஜினி என்று தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.
துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்தவர்களை சந்தித்து ஆறுதல் கூற தூத்துக்குடி செல்கிறேன். நடிகர் என்பதால் என்னை பார்த்தால் இந்த சூழலில் தூத்துக்குடி மக்கள் சந்தோஷமாக இருப்பார்கள் என்று கூறிய ரஜினிகாந்த் தூத்துக்குடி துப்பக்கிசூட்டில் படுகாயமடைந்தவர்களை நேரில் சந்திக்க அரசு மருத்துவமனைக்கு சென்றார். அங்கு ஆயிரக்கணக்கான ரசிகர்கள் அவருக்கு வரவேற்பளித்தனர்.
துப்பாக்கிச்சூட்டில் காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார்.
இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த ரஜினிகாந்த், விஷமிகள் புகுந்து நாசக்கார வேலைகளை செய்துள்ளனர். சமூக விரோதிகள் போராட்டத்தின் உள்ளே நுழைந்தனர் என பாதிக்கப்பட்ட மக்கள் கூறியதாக தெரிவித்தனர். சமூக விரோதிகளை முன்னால் முதல்வர் ஜெயலலிதா இரும்புக்கரம் கொண்டு அடக்கினார். அதனை இந்த அரசு செய்ய தவறிவிட்டது. சமூகவிரோதிகளை இரும்புகரம் கொண்டு அடக்கவேண்டும் அடக்கவில்லையென்றால் தமிழகத்திற்கே ஆபத்து என்றும் கூறினார். அதேபோல, ஜல்லிக்கட்டு போராட்டத்தைப் போலவே இந்த போராட்டமும் ரத்தத்தில் முடிந்துள்ளது என தன் வருத்தத்தை தெரிவித்துள்ளார்.
ரஜினியின் இந்த கருத்துக்கு ஒட்டுமொத்த அரசியல் கட்சி தலைவர்களும் கண்டனம் தெரிவித்துவந்த நிலையில், அனைத்து விஷயங்களிலும் குழப்பமின்றி தெளிவாக கருத்து தெரிவித்துள்ளார் நடிகர் ரஜினி என்று தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார். மேலும், அமையதியாக நடந்து வந்த போராட்டத்தில் பயங்கரவாதிகள் புகுந்ததால் வன்முறை நிகழ்ந்தது என அவர் தெரிவித்துள்ளார்.
