நடுக்கடலில் பிரச்சாரம் செய்த தமிழிசை - ஆளில்லாத கடையில் யாருக்கு டீ ஆத்துறாங்க?
ஆர்கே நகர் இடைத் தேர்தலுக்கு இன்னும் 7 நாட்களே உள்ளன. இதனால், அனைத்து கட்சி வேட்பாளர்களும் வீடு வீடாக நடந்தே சென்று வாக்கு சேகரித்து வருகின்றனர்.
சில வேட்பாளர்கள், வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதாக ஏராளமான புகார்கள், தேர்தல் ஆணையத்துக்கு சென்றுள்ளன. அதன்பேரில் இதுவரை ரூ.7 லட்சம் வரை வாகனங்களிலும், வீடுகளிலும் பதுக்கி வைத்த பணத்தை பறிமுதல் செய்துள்ளனர். 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தற்போதைய சூழ்நிலையில் பணம், பரிசு பொருட்கள் கொடுக்க எந்த திசையில் சென்றாலும், தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் சுற்றி வளைத்து, பிடிக்கின்றனர். இதனால், வேட்பாளர்களை அழைத்து கொண்டு, கட்சியின் மூத்த நிர்வாகிகள், பிரமுகர்களே வாக்கு சேகரிப்பதற்காக களத்தில் குதித்துள்ளனர்.
இந்நிலையில், மீனவர்களிடம் வாக்கு சேகரிப்பதற்காக தமது வேட்பாளர் கங்கை அமரனுடன், பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன், நடுக்கடலுக்கே சென்றுவிட்டார்.
பாஜக வேட்பாளர் கங்கை அமரன், மாநில தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன் மற்றும் சிலர் நேற்று காலை காசிமேடு மீன்பிடி துறைமுகத்துக்கு சென்றனர். அப்போது, அங்கிருந்த மீனவர்கள், மீன் பிடிக்க செல்வதற்காக, தங்களது படகுகளை தயார் செய்து கொண்டிருந்தனர்.
அவர்களிடம் பாஜக வேட்பாளர் கங்கை அமரன் வாக்கு சேகரித்தார். பின்னர், அவர்களுடன் விசை படகு மூலம் கடலுக்கு சென்றனர். அங்கு நடுக்கடலில் வலையை விரித்து மீன்பிடித்து கொண்டிருந்த மீனவர்களிடம், தமது வேட்பாளர் கங்கை அமரனுக்கு வாக்களிக்கும்படி தமிழிசை பிரச்சாரம் செய்தார்.