சென்னையைப் பெரு வெள்ளங்கள் தாக்கும் என பல ஆண்டுகளுக்கு முன்பே நாங்கள் எச்சரித்தோம். அது, நடந்ததா, இல்லையா? இதெல்லாம் வெறும் டிரெய்லர்தான். இன்னும் பெரிய பெரிய வெள்ளங்கள் சென்னையைத் தாக்கும். எனவே சென்னை நகரின் அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்த வேண்டும்.
நீட் தேர்வின் உண்மை நிலை குறித்து என்னுடன் விவாதிக்க திமுக, அதிமுக தயாரா? டாஸ்மாக் குறித்தும், மதுவால் ஏற்படும் தீமைகள் குறித்தும் விவாதிக்க தயாரா என்று பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பாமக தனித்துப் போட்டியிடுகிறது. அக்கட்சி வேட்பாளர்களை ஆதரித்து இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். சென்னையில் நடந்த பிரசாரக் கூட்டத்தில் அன்புமணி பேசுகையில், “தமிழகத்தில் கடந்த 55 ஆண்டுகளாக தேக்கநிலையே நிலவுகிறது. மக்கள் மத்தியில் எந்த முன்னேற்றமும் இல்லை. திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளும் இதுவரை வெறும் வசனங்களைத்தான் பேசுகின்றன. மக்கள் முன்னேற்றத்துக்காக இரு கட்சிகளும் எதுவும் செய்யவில்லை. உலகில் உள்ள பல நாடுகளுக்கு நான் சென்றிருக்கிறேன். அங்குள்ள மக்களின் முன்னேற்றத்தையும் வாழ்க்கைத் தரத்தையும் தமிழகத்தில் கொண்டு வரவேண்டும் என்பதே என்னுடைய ஆசை. சென்னை நகரை மேம்படுத்துவதற்கு எங்களிடம் நிறைய திட்டங்கள் இருக்கின்றன. ஆனால், வாய்ப்புக்காகக் காத்திருக்கிறோம்.

சென்னையைப் பெரு வெள்ளங்கள் தாக்கும் என பல ஆண்டுகளுக்கு முன்பே நாங்கள் எச்சரித்தோம். அது, நடந்ததா, இல்லையா? இதெல்லாம் வெறும் டிரெய்லர்தான். இன்னும் பெரிய பெரிய வெள்ளங்கள் சென்னையைத் தாக்கும். எனவே சென்னை நகரின் அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்த வேண்டும். அதற்கு உள்ளாட்சி அமைப்புகளில் பாமக அதிகாரம் பெற வேண்டும். மக்கள் விரும்பும் மாற்றத்தை பாமகவால் மட்டுமே கொண்டுவர முடியும். மாநில அரசுகளின் உரிமைகளை மத்திய அரசு பறிப்பதாக திமுக, அதிமுக அரசுகள் குறைசொல்லி வருகின்றன. ஆனால், உள்ளாட்சி அமைப்புகளுக்கு உரிய அதிகாரத்தை ஆளும் அரசுகள் தருவதே இல்லை. ஆனால், உள்ளாட்சிகளுக்கு பாமக அந்த அதிகாரத்தை வழங்கும். வெறும் டம்மியாக, முதல்வர் சொல்வதை மட்டும் கேட்கும் மேயராக இதுவரை இருந்து வந்த நிலையெல்லாம் மாறும்.

நீங்கள் மாம்பழம் சின்னத்தில் வாக்களித்தால் மக்களின் தலையெழுத்து மாறும். மாற்றத்தை நீங்கள் தந்தால், முன்னேற்றத்தை நாங்கள் தருகிறோம். தற்போது நீட் தேர்வில் அரசியல் நடந்து வருகிறது. இந்த விஷயத்தில் விவாதத்துக்கு வரத் தயாரா என 2 திராவிட கட்சிகளும் ஒன்றுக்கொன்று கேள்வி எழுப்புகின்றன. நான் கேட்கிறேன், நீட் தேர்வின் உண்மை நிலை குறித்து என்னுடன் விவாதிக்க திமுக, அதிமுக தயாரா? டாஸ்மாக் குறித்தும், மதுவால் ஏற்படும் தீமைகள் குறித்தும் விவாதிக்க தயாரா? மதுவிலக்குதான் பாமகவின் கொள்கை. நீட் தேர்வு தேவையில்லை என்பதுதான் பாமகவின் ஒரே நிலைப்பாடு. அடுத்து வரும் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இந்த உள்ளாட்சி தேர்தல் அடித்தளம் ஆகும். எனவே, பாமக வேட்பாளர்களுக்கு மக்கள் ஆதரவளிக்க வேண்டும்.” என்று அன்புமணி ராமதாஸ் பேசினார்.
