நான் என்ன தப்பு செஞ்சேன்? விஜயபாஸ்கரிடம் போனில் கண் கலங்கிய பீலா ராஜேஷ்.. தலைமைச் செயலகத்தில் நடந்தது என்ன?
திடீரென சுகாதாரத்துறை செயலாளராக இருந்த தன்னை தமிழக அரசு மாற்றியதால் ஏற்பட்ட மன உளைச்சலால் பீலா ராஜேஷ் கண் கலங்கியதாக கோட்டை வட்டாரத்தகவல்கள் தெரிவிக்கின்றன.
திடீரென சுகாதாரத்துறை செயலாளராக இருந்த தன்னை தமிழக அரசு மாற்றியதால் ஏற்பட்ட மன உளைச்சலால் பீலா ராஜேஷ் கண் கலங்கியதாக கோட்டை வட்டாரத்தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு கட்டுக்கு அடங்காமல் சென்று கொண்டிருக்கிறது. அதிலும் சென்னையில் எந்த பக்கம் திரும்பினாலும் கொரோனா பாதிப்பு பகுதியாகவே உள்ளது. கொரோனாவை தடுக்க அரசு நடவடிக்கை எதுவும் எடுக்கிறதா? என்கிற கேள்வி மக்கள் மத்தியில் எழ ஆரம்பித்தது. மேலும் கொரோனாவை தமிழக அரசால் கட்டுப்படுத்த முடியவில்லை என்கிற குற்றச்சாட்டுகளும் எழ ஆரம்பித்தன. இந்த நிலையில் தான் ஒரே நாளில் இதுவரை இல்லாதஅளவிற்கு சுமார் 2000 பேர் வரை கொரோனாவிற்கு பாதிக்கப்பட்டனர்.
மேலும் கொரோனா உயிரிழப்பும் திடீரென அதிகரிக்க ஆரம்பித்துள்ளது. அத்தோடு சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் திடீரென செவிலியர்கள் போராட்டம் நடத்தினர். மேலும் சென்னையில் ஊரடங்கு மீண்டும் தீவிரப்படுத்த வேண்டிய நிலை உருவாகிவிட்டதாகவும் விரைவில் முழு ஊரடங்கு அறிவிக்கப்படும் என்று வதந்திகள் பரவின. இதனால் மீண்டும் அசாதாரண சூழல் தமிழகத்தில் உருவான நிலையில் தான் பீலா ராஜேஷ் மாற்றப்பட்டுள்ளார். சுகாதாரத்துறை செயலாளராக நியமிக்கப்பட்ட குறுகிய காலத்தில் பிரபலமானவர் பீலா ராஜேஷ்.
துவக்கத்தில் கொரோனா தடுப்பு பணிகளில் நேரடியாக களம் இறங்கி அமைச்சர் விஜயபாஸ்கர் செயல்பட்டுக் கொண்டிருந்தார். பிறகு அவர் மீது முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு ஏற்பட்ட அதிருப்தியால் பீலா ராஜேஷ் முன்னிலைப்படுத்தப்பட்டார். ஆனால் அவரது செயல்பாடுகளிலும் முதலமைச்சருக்கு திருப்தி ஏற்படவில்லை. இதனால் கொரோனா தடுப்பு பணியில் தலைமைச் செயலாளர் சண்முகம் நேரடியாக களம் இறங்கினார். ஒரு கட்டத்தில் சென்னைக்கு மட்டும் சிறப்பு அதிகாரியாக ராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்டார்.
இப்படி கொரோனா தடுப்பு பணிகளுக்கு என்று புதிது புதிதாக ஆட்களை மாற்றியும் எந்த பலனும் கிடைக்கவில்லை. இந்த நிலையில் தான் சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் மாற்றப்பட்டுள்ளார். மீண்டும் சுகாதாரத்துறை செயலாளராக ராதாகிருஷ்ணனே நியமிக்கப்பட்டுள்ளார். இந்த தகவல் நேற்று வெளியே வரும் வரையாருக்கும் தெரியாது என்கிறார்கள். செய்தியாளர் சந்திப்பில் இருந்த ராதாகிருஷ்ணனுக்கே செய்தியாளர்கள் சொல்லித்தான் இந்த தகவல்தெரிந்தது. இதே போல் பீலா ராஜேசும் தான் மாற்றப்பட்ட தகவல்களை தொலைக்காட்சி மூலமே தெரிந்து கொண்டார்.
கொரோனாவிற்கு எதிராக துவக்கம் முதலே கடுமையாக போராடி வந்த தனக்கு இது தான் பரிசா என தனது சக அதிகாரிகளிடம் புலம்பியுள்ளார். மேலும் பீலா ராஜேஷ் சுகாதாரத்துறை செயலாளர் பதவிக்கு வர அமைச்சர் விஜயபாஸ்கர் தான் முக்கிய காரணம். அவரை உடனே தொலைபேசியில் தொடர்பு கொண்டு பீலா ராஜேஷ் பேசியதாகவும், அப்போது அவர் கண்கள் கலங்கியதாகவும் கூறுகிறார்கள். பிறகு அமைச்சர் விஜயபாஸ்கர் ஆறுதல் தெரிவித்த பிறகே பீலா, அமைதியானதாகவும் சொல்கிறார்கள்.
சுகாதாரத்துறை செயலாளர்பதவியில் இருந்து மாற்றப்பட்டாலும் வேறு ஒரு முக்கியத்துறையில் தான் பணியமர்த்தப்பட்டுள்ளதால் கலங்க வேண்டாம் என்று பீலா ராஜேசுக்கு ஆறுதல் கூறப்பட்டு வருகிறது. இதனிடையே சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் எத்தனையோ முறை மறைமுகமாக கூறியும், அமைச்சர் விஜயபாஸ்கருடன் சில முக்கிய தகவல்களை ஷேர் செய்ததும், அவரது அறிவுறுத்தல்படி சில நடவடிக்கைகளை மேற்கொண்டதும் முதலமைச்சர் அலுவலக அறிவுறுத்தல்களை ஒதுக்கி வைத்ததும் தான் பணியிடமாற்றத்திற்கு காரணம் என்று கூறப்படுகிறது.