அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கருக்கு கொரோனா..!
தமிழ்நாட்டின் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.
இந்தியாவில் கொரோனா 2ம் அலை அதிதீவிரமாக பரவிவருகிறது. தேசியளவில் தினமும் 4 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுவருகின்றனர். தமிழ்நாட்டில் நேற்று 27 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு தொற்று உறுதியானது.
கொரோனாவை கட்டுப்படுத்த நாளை முதல் முழு ஊரடங்கு தமிழ்நாட்டில் அமல்படுத்தப்பட்டுள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்தவும், கொரோனா நோயாளிகளுக்கு முறையான சிகிச்சையளிக்கவும் தமிழ்நாட்டில் புதிதாக பொறுப்பேற்றுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு தீவிரமாக செயல்பட்டுவருகிறது.
இந்நிலையில், ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக நேற்று முன் தினம் பொறுப்பேற்றுக்கொண்ட எஸ்.எஸ்.சிவசங்கருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. மருத்துவர்களின் அறிவுறுத்தலின்பேரில் வீட்டிலேயே தன்னை தனிமைப்படுத்தி கொண்டுள்ளார் அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர்.
கொரோனா உறுதியானதன் விளைவாக, ஸ்டாலின் தலைமையில் நடந்த திமுக அரசின் முதல் அமைச்சரவை கூட்டத்தில் அவர் கலந்துகொள்ளவில்லை.