பாஜகவை கொச்சைப்படுத்தினால் பிசினஸில் கைவைப்போம்..! பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பகிரங்க எச்சரிக்கை
மேகேதாட்டுவில் கர்நாடக அரசு அணைகட்ட முயல்வதை கண்டித்து தமிழக பாஜக சார்பில் தஞ்சாவூரில் நடத்தப்பட்ட உண்ணாவிரத போராட்டத்தில் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, பாஜகவை கொச்சைப்படுத்தினால் அவர்களின் பிசினஸில் கைவைப்போம் என்று பகிரங்கமாக மிரட்டல் விடுத்துள்ளார்.
கர்நாடக அரசு மேகேதாட்டுவில் அணை கட்டுவதில் உறுதியாக உள்ளது. தமிழக விவசாயத்தை அது பாதிக்கும் என்பதால் தமிழக அரசு, அரசியல் கட்சிகள், விவசாயிகள் என அனைத்து தரப்பிலும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
இந்நிலையில், மேகேதாட்டுவில் கர்நாடக அரசு அணை கட்ட முயல்வதை கண்டித்தும், அந்த முயற்சியை கைவிட வலியுறுத்தியும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில் பாஜக சார்பில் தஞ்சாவூர் பனகல் கட்டிடம் எதிரே உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.
தஞ்சாவூர் பெரிய கோவில் அருகேயுள்ள சோழன் சிலையிலிருந்து உண்ணாவிரதம் நடந்த இடம்வரை மாட்டுவண்டி பேரணி நடைபெற்றது. அண்ணாமலை மாட்டுவண்டியில் வர, மற்ற பாஜக நிர்வாகிகள் அவரை பின் தொடர்ந்தனர்.
உண்ணாவிரத போராட்டத்தில் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, தமிழகத்தில் டாஸ்மாக் விற்பனை குறித்து மாதந்தோறும் ஆய்வுக்கூட்டம் நடத்தும் தமிழக அரசு, விவசாயிகள் நலத்திட்டங்களை செயல்படுத்துவது தொடர்பாக ஒரு ஆய்வுக்கூட்டமாவது நடத்தியிருக்கிறார்களா என்று கேள்வி எழுப்பினார்.
சாராயத்துறை அமைச்சரை தன் பக்கத்திலேயே வைத்துக்கொள்ளும் முதல்வர், விவசாயத்துறை அமைச்சரை தூரமாகவே வைத்திருக்கிறார். இதுவே தமிழக அரசின் செயல்பாடுகளை உணர்த்துவதற்கு ஒரு சான்று என்று தமிழக அரசை விமர்சித்தார்.
மேகேதாட்டுவில் அணை கட்டினால் தமிழக பாஜக கண்டிப்பாக எதிர்க்கும். மேகேதாட்டுவில் அணை கட்டக்கூடாது என சட்டம் தெளிவாக இருப்பதால் கட்ட முடியாது. காங்கிரஸ் ஆட்சி காலத்தில் விவசாயிகளின் பட்டினிச்சாவு அதிகமாக இருந்தது. ஆனால் பிரதமர் மோடியின் ஆட்சியில் ஓரு விவசாயி கூட பட்டியால் சாகவில்லை. இந்த உண்ணாவிரத போராட்டத்துக்கு வந்திருப்பவர்கள், பிரியாணி பொட்டலங்களுக்காக வரவில்லை; விவசாயிகளின் உணர்வுகளை புரிந்துகொண்டு வந்திருக்கிறார்கள் என்றார் அண்ணாமலை.
பாஜகவை கொச்சைப்படுத்துபவர்களுக்கு எச்சரிக்கை விடுத்து பேசிய அண்ணாமலை, தமிழ்நாட்டுக்கு உண்மையாக இருக்கும் பாஜகவை கொச்சைப்படுத்தினால், அவர்களின் அனைத்து விஷயங்களும் வீதிக்கு வந்துவிடும். தமிழக அரசியலில் யாராவது பாஜகவை கொச்சைப்படுத்தினால் சும்மா விடமாட்டோம். மீறி பேசினால், அவர்களின் பிசினஸில், அடிப்படையில் கைவைப்போம் என்று பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்துள்ளார் அண்ணாமலை.