20 லட்சம் பேர் பங்கேற்கும் ஆன்மீகப் பேரணி... தமிழக பாஜக மெகா பிளான்..!
தமிழகம் முழுவதும் 20 லட்சம் பேர் பங்கேற்க உள்ள ஆன்மீகப் பேரணியையும் நடத்த உள்ளோம் என்று தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த தினம் செப்டம்பர் 17ம் தேதி கொண்டாடப்படுகிறது. மோடியின் பிறந்த தினத்தை கொண்டாடுவது தொடர்பாக சென்னை தியாகராய நகரில் உள்ள பாஜக தலைமையகமான கமலாலயத்தில் தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்துக்குப் பிறகு எல்.முருகன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “செப்டம்பர் 17-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுதும் மரம் நடும் விழா, அன்னதானம், கொடியேற்றம் நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. இந்த நிகழ்ச்சிகள் அனைத்து மக்களையும் சென்று சேரும் விதமாக சேவை வாரமாக கொண்டாட உள்ளோம்.
தமிழகம் முழுவதும் 20 லட்சம் பேர் பங்கேற்க உள்ள ஆன்மீகப் பேரணியையும் நடத்த உள்ளோம். நீட் விவகாரத்தில் திமுக மாணவர்களை பயமுறுத்துகிறது. மாணவர்களின் தற்கொலை வேதனை அளிக்கிறது. ஆனால், இதில் அரசியல் செய்வது அருவருக்கத்தக்கது செயல். அரசியல் லாபத்துக்காக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மாணவர்களின் உயிரோடு விளையாடுகிறார். மாணவர்களின் உயிரோடு விளையாடுவதை திமுக நிறுத்திக்கொள்ள வேண்டும். நீட் விவகாரத்தில் யாரும் அரசியல் செய்ய கூடாது” என்று எல்.முருகன் தெரிவித்தார்.