முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை தொடர்பு கொள்ள முயன்ற போது, அவரது இரண்டு அலைபேசிகளுமே, 'சுவிட்ச் ஆப்' செய்யப்பட்டிருந்தன. 

அதிமுக ஆட்சியில் பால்வளத்துறை அமைச்சராக இருந்த ராஜேந்திர பாலாஜி வீட்டுக்கு, கடந்த தீபாவளி படிகையின்போது 1.5 டன் இனிப்புகள் அனுப்பப்பட்டன. அதற்கான பணத்தை அவர் செலுத்தவில்லை'' என தற்போதைய பால்வளத்துறை அமைச்சர் நாசர் தெரிவித்துள்ளார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

சேலத்தில், ஆவின் விற்பனை, பொருட்களின் தரம் குறித்து, பால்வளத்துறை அமைச்சர் நாசர் ஆய்வு செய்தார். ஆவின் பால் பண்ணையில் ஆய்வு செய்து, தொழிலாளர்களிடம் பணி பாதுகாப்பு குறித்து கேட்டறிந்தார். பின்னர் அவர் பேசியபோது, ’’ஆவின் பால் விலை லிட்டருக்கு, 3 ரூபாய் குறைக்கப்பட்டதால், 270 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டாலும், பால் விற்பனை, 1.50 லட்சம் லிட்டர் அதிகரித்துள்ளது. ஆவினில் புரோக்கர்கள் வாயிலாக தவறான முறையில், இளநிலை பதவியில் 234 பேர், 460 பணியாளர்கள் நியமித்தது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

மேலாளர் தகுதியில், 174 பேர் நியமனம் ரத்து செய்யப்பட்டு, புதிதாக நியமிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. தமிழகத்தில் உள்ள, 25 ஆவின் ஒன்றியங்களிலும் முறைகேடு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதில் சேலம், தேனி, மதுரையில் பெரிய அளவில் நடந்துள்ளது. கடந்த ஆட்சியில் பால்வளத்துறை அமைச்சராக இருந்த ராஜேந்திர பாலாஜி வீட்டுக்கு, கடந்த தீபாவளியின் போது, 1.5 டன் இனிப்புகள் அனுப்பப்பட்டுள்ளன. அதற்கான பணத்தை அவர் செலுத்தவில்லை. ஆதாரம் இருப்பதால் விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும். பணி காலத்தில் இறந்த ஆவின் ஊழியர்களின் வாரிசுகள், 48 பேருக்கு, விரைவில் கருணை பணி வழங்கப்படும்’’ என அவர் தெரிவித்தார்.

அமைச்சர் நாசரின் குற்றச்சாட்டு குறித்து கேட்க, முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை தொடர்பு கொள்ள முயன்ற போது, அவரது இரண்டு அலைபேசிகளுமே, 'சுவிட்ச் ஆப்' செய்யப்பட்டிருந்தன. அவரது ஆதரவாளர்களிடம் விசாரித்ததில், கொரோனா தொற்றில் இருந்து குணமாகி, தற்போது சென்னையில் தனிமையில் இருப்பதாக தெரிவித்தனர்.