பல நாட்களாக போலீசுக்கு டிமிக்கி கொடுக்கும் எஸ்.வி.சேகர்... சென்னை முழுதும் போஸ்டர் ஒட்டி தேடுதல் வேட்டை...!
கடந்த 25 நாட்களுக்கும் மேலாக தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து வரும் பாஜகவை சேர்ந்த எஸ்.வி.சேகர், தேடப்படும் நபர் என்று கூறி சென்னை மற்றும் கோவை மாநகரின் பல்வேறு இடங்களில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.
பெண் பத்திரிகையாளர்கள் குறித்து நடிகரும் பாஜகவைச் சேர்ந்தவருமான எஸ்.வி.சேகர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் இழிவான கருத்தை பதிவிட்டிருந்தார். இதுதொடர்பாக பத்திரிகையாளர்கள் நலச் சங்கம் அளித்த புகாரின் அடிப்படையில் எஸ்.வி.சேகர் மீது போலீஸ் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதனையடுத்து எஸ்.வி.சேகர் முன்ஜாமீன்கோரி உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். அதேசமயம் எஸ்.வி.சேகருக்கு முன்ஜாமீன் வழங்க ஆட்சேபம் தெரிவித்து பத்திரிகையாளர்கள் பலரும் இடையீட்டு மனுத்தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கில் எஸ்.வி.சேகரின் முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ராமதிலகம் உத்தரவிட்டார். அதோடு, எஸ்.வி.கேகர் கருத்துக்கும் கடும் கண்டனம் தெரிவித்திருந்தார்.
தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து வரும் எஸ்.வி.சேகர், மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கலந்து கொண்ட பொதுநிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டுள்ளார். இந்த சம்பவம் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. காவல் துறை வேண்டுமென்றேதான் கைது நடவடிக்கை எடுக்காமல் இருக்கிறது என்று பெண் நிருபர்கள் குற்றம் சாட்டுகின்றனர். அரசு உயர்மட்ட செல்வாக்கால் எஸ்.வி.சேகர் கைது செய்யப்படவில்லை என்றும் அவர் மீது கைது நடவடிக்கை எடுக்காமல் காவல்துறை இருந்து வருவதாகவும் பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கலந்து கொண்ட விழாவில் பங்கேற்ற நிலையில், காவல்துறை எந்த அளவுக்கு கடமை செய்து வருகிறது என்பதும் இதன் மூலம் நிரூபணமாகிறது என்று பெண் நிருபர்கள் கூறுகின்றனர். எஸ்.வி.சேகர், காவல்துறையில் சரணடைய வேண்டும். இல்லை என்றால் காவல்துறை அவரை கைது செய்ய வேண்டும். இது தவறான முன்னுதாரணமாகிவிடக் கூடாது என்று பொதுமக்கள் கூறுகின்றனர்.
இரு தினங்களுக்கு முன் தலைமறைவாக இருக்கும் எஸ்.வி.சேகர் "தேடப்படும் நபர்" என்று கூறி சென்னையின் பல்வேறு இடங்களில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன. அந்த சுவரொட்டியில், தேடப்படும் எஸ்.வி.சேகருக்கு வயது 67 என்றும், அடையாளம் பூநூல் தெரியும்படி இருப்பார், பெண்களை இழிவாக பேசுவார் என்று அச்சிடப்பட்டுள்ளது. இவரைப் பற்றி தகவல் தெரிந்தால் அருகாமையில் உள்ள காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கவும் என்று சுவரொட்டியில் எழுதப்பட்டிருந்தது. மக்கள் மன்றம், 95854 30895 என்றும் அதில் அச்சிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தேடப்படும் குற்றவாளி எஸ்.வி.சேகரை பார்த்தாலோ, இருக்கும் இடம் குறித்து தகவல் கிடைத்தாலோ போலீசாருக்கு தகவல் அளிக்குமாறு கோவை மாநகரில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. மத்திய அமைச்சர் கலந்துகொள்ளும் நிகழ்ச்சியில் பங்கேற்றாலும், காவல் துறையினரின் கண்களுக்கு சிக்காமல் தலைமறைவாக இருக்கும் எஸ்.வி.சேகரை பார்த்தாலோ, அவர் இருக்கும் இடம் குறித்த தகவல் கிடைத்தாலோ கீழ்க்காணும் கோவை மாநகர காவல்துறை உயரதிகாரிகளுக்கு தகவல் அளித்து கைது செய்ய உதவுமாறு கேட்டுக்கொள்கிறோம் என்று போஸ்டர் ஒட்டப்பபட்டுள்ளது. மேலும் கோவை மாநகர ஆணையர், சட்டம் ஒழுங்கு துணை ஆணையர், கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர், மாவட்ட காவல்துறை கட்டுப்பாட்டு அறையின் தொலைபேசி எண்கள் அதில் அச்சிடப்பட்டுள்ளன. இப்படிக்கு கோவை மாவட்ட பத்திரிகையாளர்கள் என்றும் அதில் அச்சிடப்பட்டுள்ளது.