முடிந்தது சூரப்பாவின் கதை.. அண்ணா பல்கலை கழகத்திற்கு புதிய துணை வேந்தர்.. ஆளுநர் அதிரடி உத்தரவு.
அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தராக நியமிக்கப்பட்ட சூரப்பா மீது தொடர் ஊழல் புகார் எழுந்த நிலையில், அதுகுறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி கலையரசன் தலைமையில் தமிழக அரசு குழு ஒன்றை அமைத்தது.
அண்ணா பல்கலைக்கழகத்துக்கு புதிய துணைவேந்தரை தேர்வு செய்யும் தேடல் குழுவுக்கு உறுப்பினரை நியமித்து ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உத்தரவிட்டுள்ளார். டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகதீஷ் குமாரை தேடல் குழுவின் தலைவராக நியமித்து ஆளுநர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தராக நியமிக்கப்பட்ட சூரப்பா மீது தொடர் ஊழல் புகார் எழுந்த நிலையில், அதுகுறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி கலையரசன் தலைமையில் தமிழக அரசு குழு ஒன்றை அமைத்தது. அது குறித்த விசாரணை வளையத்தில் அண்ணா பல்கலைக்கழக ஊழியர்கள், பதிவாளர்கள் உள்பட பலர் உள்ளனர்.
விசாரணை நடத்திய கலையரசன், சூரப்பா மீதான புகாரில் முகாந்திரம் உள்ளதாக தெரிவித்தார். இந்நிலையில் அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் பதவி காலமும் வரும் 11ம் தேதியுடன் முடிவடைகிறது. இதனால் அண்ணா பல்கலைக்கழகத்திற்கு புதிய துணைவேந்தரை தேர்வு செய்ய தேர்வுக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் துணைவேந்தரை தேர்வு செய்வதற்கான குழுவை அமைத்து தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உத்தரவிட்டுள்ளார்.
தேர்தல் ஆணையத்தின் ஒப்புதலுடன் அந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தேடல் குழுவுக்கு ஏற்கனவே அண்ணா பல்கலைக்கழகத்தின் பிரதிநிதியாக, எஸ்.பி.தியாகராஜன் நியமிக்கப்பட்டிருந்தார். மாநில அரசின் பிரதிநிதியாக முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி ஷீலா ராணி சுங்கத் நியமிக்கப்பட்டுள்ளார். ஜெகதீஷ் குமார் தலைமையிலான தேடல் குழு, புதிய துணைவேந்தரைத் தேர்வு செய்வதற்கான பணியை ஏப்ரல் 6-ம் தேதிக்குப் பின் துவங்க உள்ளது. கடந்த ஆண்டில், சென்னைப் பல்கலைக்கழக துணைவேந்தரைத் தேர்வு செய்வதற்கான தேடல் குழுவுக்கும், ஜே.என்.யூ துணைவேந்தர் ஜெகதீஷ் குமாரே தலைமை தாங்கினார். இந்த தேடல் குழு 4 மாத கால அவகாசத்துக்குள் 3 பெயர்களை இறுதி செய்து ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கும் என்பது குறிப்பிடதக்கது.