Vanniyar Reservation: வன்னியர்களுக்கான 10.5% இடஒதுக்கீடு ரத்து.. இடைக்கால தடை விதிக்க மறுத்த உச்சநீதிமன்றம்.!
வன்னியர்களுக்கான 10.5 % உள் இட ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்ட விவகாரத்தில் இடைக்கால உத்தரவு பிறப்பிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துவிட்டது.. உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளதால், இட ஒதுக்கீட்டை ரத்து செய்த உயர்நீதிமன்ற மதுரை கிளையின் உத்தரவு தொடர்கிறது.
வன்னியர்களுக்கான 10.5 % இட ஒதுக்கீடு தொடர்பான உயர்நீதிமன்ற கிளை உத்தரவுக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கி கடந்த அதிமுக ஆட்சியில் அவசர அவசரமாக சட்டம் இயற்றப்பட்டது. இது தொடர்பான அரசாணையை ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும் திமுக தலைமையிலான தமிழக அரசு வெளியிட்டது. இட ஒதுக்கீட்டை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை, சாதி வாரியான கணக்கெடுப்பை முறையாக நடத்திய பின்னரே இட ஒதுக்கீட்டை வழங்க வேண்டும் எனக் கூறி வன்னியர்களுக்கு வழங்கப்பட்ட 10.5 சதவீத உள் ஒதுக்கீட்டை ரத்து செய்து உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு சார்பில் மேல்முறையீடு செய்யப்படும் என்று தமிழக அரசு தெரிவித்திருந்தது. அதன்படி, வன்னியர்களுக்கான 10.5 சதவீத உள் இட ஒதுக்கீடு அரசாணை ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது. இந்நிலையில், இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, வன்னியர்களுக்கான 10.5 % உள் இட ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்ட விவகாரத்தில் இடைக்கால உத்தரவு பிறப்பிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துவிட்டது.. உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளதால், இட ஒதுக்கீட்டை ரத்து செய்த உயர்நீதிமன்ற மதுரை கிளையின் உத்தரவு தொடர்கிறது.
மேலும், 10.5 % இட ஒதுக்கீட்டின்படி ஏற்கனவே நடந்த மாணவர் சேர்க்கை, பணி நியமனங்களில் மாற்றம் செய்யக்கூடாது. அடுத்த உத்தரவு வரும் வரை மாணவர் சேர்க்கையோ, பணி நியமனங்களோ செய்யக்கூடாது என நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர். இதனையடுத்து, இந்த வழக்கின் விசாரணையை பிப்ரவரி 15,16ம் தேதிகளுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.