சொத்து குவிப்பு வழக்கின் தீர்ப்புக்காக காத்திருக்கிறார் கவர்னர் – திமுக எம்பி பரபரப்பு பேட்டி
அதிமுக பொது செயலாளர் சசிகலா இன்று, முதலமைச்சராக பதவியேற்பதாக அறிவிக்கப்பட்டது. இதையொட்டி சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில், பதவியேற்பு பிரமாண்ட விழாவுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்தன.
இதைதொடர்ந்து நேற்று மாலை முதல் சென்னை காமராஜர் சாலை சாந்தோம் சர்ச் பகுதியில் இருந்து சென்னை போர் நினைவு சின்னம் வரை பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. அமைச்சர்களும், விழா ஏற்பாடுகளை நேரில் சென்று, பார்வையிட்டனர்.
ஆனால், பதவி பிரமாணம் செய்து வைக்கும் கவர்னர், சென்னைக்கு வரவில்லை. இதனால் சசிகலா, பதவியேற்கும் நிகழ்ச்சி ஒத்தி வைக்கப்பட்டது.
இதுகுறித்து, ராஜ்யசபா திமுக எம்பி, டி.கே.எஸ்.இளங்கோவன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
சசிகலா முதல்வராக பதவியேற்கும் விழாவுக்கு தேதி குறிப்பது பற்றி, அதிமுக அமைச்ச்ர்கள் மற்றும் நிர்வாகிகள் யாரும், கவர்னர் கூறவில்லை. இதனால், அவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.
அதே நேரத்தில், ஒ.பன்னீர்செல்வம் தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதாக கொடுத்த கடிதத்தை கவர்னர் பெற்று கொண்டார். மேலும், சசிகலா முதல்வராக பொறுப்பேற்கும் வரை ஓ.பி.எஸ். முதல்மைச்சர் பதவியில் நீடிக்க வேண்டும் என கூறினார்.
இதை தொடர்ந்து, சசிகலாவுக்கு பதவி பிரமாணம் செய்து வைக்க வேண்டியது கவர்னரின் கடமை. இதற்கு மாற்று கருத்து ஏதுவும் இல்லை.
இதற்கிடையில், அடுத்த வாரம் சசிகலா மீது உள்ள சொத்து குவிப்பு வழக்கின் தீர்ப்புக்காக கவர்னர் கத்திருக்கிறார் என தோன்றுகிறது. இதனால், அவசரப்பட்டு பதவி பிரமாணம் செய்து வைத்தபின், தீர்ப்பின் முடிவு வேறு மாதிரியாக அமைந்துவிட கூடாது என கவர்னர் எச்சரிக்கையுடன் உள்ளார் என தெரிகிறது. ஆனால், அதிமுகவினர் அவசரப்பட்டுவிட்டனர்.
மேலும், தமிகத்தில் நடைபெறும் பிரச்சனைகள் குறித்து குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி மற்றும் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோரை, தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் சந்தித்து பேச திட்டமிட்டுள்ளார். ஆனாலும், அவரது டெல்லி பயணம் குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.