supreme Court and central government betrayed tamilnadu vaiko

புதுக்கோட்டை

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதில் மத்திய அரசும், உச்சநீதிமன்றமும் தமிழகத்துக்கு துரோகம் செய்துவிட்டன என்று வைகோ சாடினார். 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி, காவிரி பாதுகாப்பு இயக்கம் சார்பில் அதன் ஒருங்கிணைப்பாளரும், ம.தி.மு.க. பொதுச் செயலாளருமான வைகோ கடந்த நான்கு நாட்களாக தஞ்சாவூர் மாவட்டத்தில் தொடர் சுற்றுப் பயணம் செய்து வருகிறார். 

நான்காவது நாளான நேற்று புதுக்கோட்டை மாவட்டம், புளிச்சங்காடு கைகாட்டிக்கு வந்தார். அவருக்கு ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் சந்திரசேகரன், ஒன்றிய செயலாளர் செல்வராஜ், இந்திய கம்யூனிஸ்டு கட்சி தஞ்சாவூர் மாவட்ட செயலாளர் திருஞானம் ஆகியோர் உற்சாக வரவேற்பு அளித்தனர். 

இதேபோல அணவயலிலும் ம.தி.மு.க. சார்பில் நாட்டிய குதிரைகளின் அணிவகுப்புடன் வரவேற்பு கொடுக்கப்பட்டது.

அப்போது திறந்த வேனில் நின்றவாறு வைகோ பேசியது: "காவிரியில் 4 டி.எம்.சி. தண்ணீர் திறக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருப்பது கண்துடைப்பு செயல். 

காவிரியில் தண்ணீர் திறந்துவிடாவிட்டால் தமிழ்நாடு பாலைவனமாக மாறும். அப்போது, கார்ப்பரேட் நிறுவனங்கள் அடிமாட்டு விலைக்கு நிலங்களை வாங்கி விடலாம் என்று கருதுகின்றன. இதற்கு மத்திய அரசும் துணை போகிறது.

தற்போது மக்கள் போராடி கொண்டிருக்க கூடிய ஐட்ரோகார்பன், மீத்தேன் போன்ற எரி பொருட்களை எடுப்பதுதான் இவர்களின் நோக்கமாகும். இதன்மூலம் மத்திய அரசுக்கு வருமானம் கொட்டும். 

நெடுவாசலில் ஐட்ரோகார்பன் திட்டத்தை எதிர்த்து போராட்டம் நடத்த வேண்டும். அதற்கு ஆதரவு தரவேண்டும் என்று நெடுவாசல் பகுதி மக்கள் என்னை சந்தித்தார்கள். ஒரு வாரத்துக்கு பிறகு திட்டமிடலாம் என கூறி உள்ளேன்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதில் மத்திய அரசும், உச்சநீதிமன்றமும் தமிழகத்துக்கு துரோகம் செய்துவிட்டன. இதற்கு தமிழக மக்கள் அனைவரும் ஒருங்கிணைந்து போராடினால்தான் வெற்றி கிடைக்கும். 

தெலுங்கானாவில் தொடர்ந்து மூன்று ஆண்டுகள் போராட்டம் நடந்தது சாதித்து விட்டார்கள். நான் அழைக்க வந்திருப்பது அமைதி போராட்டத்திற்குதான். 

நெடுவாசல் ஐட்ரோகார்பன் திட்டத்தை ரத்து செய்யக்கோரி தென்மண்டல பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. நல்ல தீர்ப்பை பெறுவோம் என நம்பிக்கை உள்ளது" என்று அவர் பேசினார்.