ரஜினிக்கு 234 தொகுதிகளிலும் ஆதரவு... கட்சி தொடங்கும் முன்பே ஆதரவை வழங்கிய அர்ஜூன் சம்பத்..!
ரஜினியின் ஆன்மிக அரசியலுக்கு 234 தொகுதிகளிலும் இந்து மக்கள் கட்சி முழு ஆதரவை வழங்கும் என்று அக்கட்சியின் தலைவர் அர்ஜூன் சம்பத் தெரிவித்தார்.
நடிகர் ரஜினிகாந்த் அரசியல் கட்சித் தொடங்கி தேர்தலில் போட்டியிடுவாறா என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், இன்று சென்னையில் மக்கள் மன்ற நிர்வாகிகள் 50 பேர் உடன் சென்னை ரஜினி ஆலோசனை நடத்தினார். கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய ரஜினி, ''மாவட்ட நிர்வாகிகள் அவர்களின் கருத்துக்களை சொன்னார்கள், நானும் எனது கருத்துக்களை சொன்னேன். எந்த முடிவு எடுத்தாலும் என்னுடன் இருப்பதாக சொன்னார்கள். எவ்வளவு சீக்கிரம் முடியுமோ என் முடிவை விரைவில் அறிவிப்பேன்'' என்றார்.
இந்த அறிவிப்பின் மூலம் ரஜினி அரசியல் கட்சி தொடங்குவது கேள்விக்குறியாகி உள்ளது. ரஜினி அரசியலுக்கு வருவார், வரமாட்டார் என்ற பட்டிமன்றத்துக்கு இந்த அறிவிப்பு இட்டுச் சென்றுள்ளது. இ ந் நிலையில் ரஜினியின் அரசியல் வருகை குறித்து இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜூன் சம்பத் பேட்டி அளித்துள்ளார். கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “நடிகர் ரஜினி கட்சி தொடங்குவது குறித்து நல்ல முடிவை எடுப்பார். தமிழகத்தில் மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள். ரஜினி தொடங்கும் கட்சி, மாற்றத்தை விரும்பும் மக்களுக்கானதாக இருக்கும். ரஜினியின் ஆன்மிக அரசியலுக்கு 234 தொகுதிகளிலும் இந்து மக்கள் கட்சி முழு ஆதரவை வழங்கும்” என்று தெரிவித்தார்.