தினகரன் ஆதரவாளர் புகழேந்திக்கு லஞ்ச ஒழிப்பு துறை சம்மன்...
பெங்களூரு சிறையில் இருக்கும் சசிகலாவுக்கு வசதி செய்து கொடுக்க லஞ்சம் வழங்கப்பட்டதாக எழுந்த புகாரின் அடிப்படையில் டிடிவி தினகரன் ஆதரவாளர்
புகழேந்திக்கு கர்நாடக லஞ்ச ஒழிப்பு துறை சம்மன் அனுப்பியுள்ளது.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் தோழியான சசிகலா, சொத்துக் குவிப்பு வழக்கில், கைது செய்யப்பட்டு பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சிறையில் சசிகலா உல்லாச வாழ்க்கை வாழ்வதாக கர்நாடக மாநில சிறைத்துறை டிஐஜியாக இருந்த பெண் அதிகாரி ரூபா கூறியிருந்தார்.
சிறைத்துறை அதிகாரியான டிஜிபி சத்யநாராயணா ராவ், 2 கோடி ரூபாய் லஞ்சம் வாங்கிக் கொண்டு சசிகலாவுக்கு வசதிகள் செய்து கொடுக்க ஒத்துழைப்பு
கொடுத்ததாக ரூபா குற்றம் சாட்டியிருந்தார். ரூபாவின் இந்த குற்றச்சாட்டுக்கு எதிராக சத்யநாராயண ராவ், அவர் மீது மானநஷ்ட வழக்கை தொடர்ந்தார்.
இது தொடர்பாக, கர்நாடக லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணை நடத்தி வருகிறது. இந்த நிலையில், கரநாடக மாநில அதிமுக செயலாளராக இருந்த புகழேந்திக்கு
லஞ்ச ஒழிப்பு துறை சம்மன் அனுப்பியுள்ளது.
வரும் 29 ஆம் தேதி அன்று லஞ்ச ஒழிப்பு துறை அலுவலகத்தில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது. லஞ்ச ஒழிப்பு துறை அனுப்பிய சம்மனைப் பெற்றுக் கொண்ட புகழேந்தி, நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க தயாராக உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.