சென்னை உயர் நீதிமன்றத்திற்கு கோடை விடுமுறை.. அவசர வழக்குகளின் ஆவணங்களை மின்னஞ்சல் மூலம் தாக்கல் செய்ய அனுமதி.
சென்னை உயர் நீதிமன்றத்தில் கோடை விடுமுறை கால அமர்வுகளில் தாக்கலாகும் அவசர வழக்குகளின் ஆவணங்களை மின்னஞ்சல் மூலம் தாக்கல் செய்வதற்கு சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தில் கோடை விடுமுறை கால அமர்வுகளில் தாக்கலாகும் அவசர வழக்குகளின் ஆவணங்களை மின்னஞ்சல் மூலம் தாக்கல் செய்வதற்கு சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. இதுதொடர்பாக நீதித்துறை பதிவாளர் எம்.என்.செந்தில்குமார் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:
சென்னை உயர் நீதிமன்றத்தில் மே மாத கோடை விடுமுறையில் சிறப்பு அமர்வுகள் அமைக்கப்பட்டு, திங்கள் மற்றும் செவ்வாய் கிழமை மனுத்தாக்கல் நடைபெற்று வரும் நிலையில், கொரோனா கட்டுப்பாடுகளின் ஒரு பகுதியாக தமிழக அரசு பிறப்பித்துள்ள முழு ஊரடங்கால் வழக்காடிகளும், வழக்கறிஞர்களும் நீதிமன்றம் வருவது சிரமமாக இருப்பதால், மின்னஞ்சல் மூலம் ஆவணங்களை தாக்கல் செய்யலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
நீதிமன்றங்கள் மூடப்பட்டுள்ளதால், உயர் நீதிமன்ற தெற்கு நுழைவுவாயிலில் மட்டுமே ஆவணங்கள் பெறப்பட்டும் நிலையில், அவ்வாறு நேரடியாக தாக்கல் செய்ய இயலாதவர்கள், மின்னஞ்சல் மூலம் தாக்கல் செய்யலாம் என அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. வழக்கின் தன்மைக்கு ஏற்ப சம்பந்தப்பட்ட பதிவுத் துறைக்கு திங்கள் மற்றும் செவ்வாய் கிழமைகளில் காலை 10 மணி முதல் மதியம் 1:30 மணிக்குள் மின்னஞ்சல் மூலம் தாக்கல் செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளதுடன், அதன்பின்னர் மின்னஞ்சலில் தாக்கல் செய்யப்படும் ஆவணங்கள் கருத்தில் கொள்ளப்படாது எனவும் திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.