எடப்பாடியை மிரட்டும் எம்எல்ஏ - வெளியேறுவேன் என்றும் அதிரடி..!!
சூலூர் அருகே அனுமதியின்றி செயல்பட்டு வரும் கல்குவாரியை மூடவில்லை என்றால் ராஜினாமா செய்துவிடுவேன் அல்லது ஓபிஎஸ் அணிக்கு சென்றுவிடுவேன் பகிரங்கமாக மிரட்டல் விடுத்துள்ளார்.
எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக வாக்களித்தவர் சூலூர் எம்எல்ஏ கனகராஜ். சசிகலா அணியைச் சேர்ந்த அவர் கூவத்தூர் விடுதியில் இருந்தவர்.
இந்நிலையில் கோவையை அடுத்த சூலூர் பகுதியில் உள்ள கல்குவாரி ஒன்றில் நேற்று விபத்து நடந்தது. இதில் 2 தொழிலாளர்கள் மரணமடைந்தனர்.
இது குறித்து விசாரிப்பதற்காக கல் குவாரிக்கு கனகராஜ் சென்றபோது அங்கு எந்த அதிகாரிகளும் இல்லை என்று கூறப்படுகிறது. மேலும் 2 தொழிலாளர்கள் இறந்தது குறித்து போலீசாரும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதனால் கடுப்பான கனகராஜ் அதிகாரிகள் மீதும், போலீசார் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார்.
ஆனால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்காததால் அதிருப்தியடைந்த கனகராஜ் எம்எல்ஏ, தான் ஒரு ஆளும் கட்சி எம்எல்ஏவாக இருந்தும் கூட தன்னால் சுதந்திரமாக செயல்பட முடியவில்லை என தெரிவித்தார்.
தனது கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை என்றால் ராஜினாமா செய்ய தயாராக உள்ளதாகவும் அல்லது ஓபிஎஸ் அணிக்கு சென்று விடப்போவதாகவும் மிரட்டல் விடுத்தார்.