சூட்கேஸ் ஜோதிடர் ஜமால்... சசிகலாவின் கட்டம் சரியில்லாததால் சரிந்த செல்வாக்கு..!
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உயிரோடு இருந்தபோது, போயஸ் தோட்டம் வீட்டின் ஆஸ்தான ஜோதிடர் எனக் கூறப்படுபவர் ஜமால்.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உயிரோடு இருந்தபோது, போயஸ் தோட்டம் வீட்டின் ஆஸ்தான ஜோதிடர் எனக் கூறப்படுபவர் ஜமால். அ.தி.மு.க. வட்டாரத்தில், “சூட்கேஸ் ஜோதிடர்” ரொம்பவே பிரபலம். ஜெயலலிதாவின் ஆஸ்தான ஜோதிடராக விளங்கிய ஜமால் என்பவரைத்தான் இப்படி சூட்கேஸ் ஜோதிடர் என்று அழைப்பார்கள். ஜெயலலிதாவுக்கு ஜோதிடம் சொல்ல போயஸ் கார்டனுக்கு செல்லும்போதெல்லாம் ஒரு சூட்கேஸுடன் வருவார் இந்த ஜோதிடர். ஆகவேதான் இந்த அடைமொழி.
ஜெயலலிதா உடம்பு சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தபோது 'சீக்கிரமே துள்ளி குதித்து விளையாடும் மாணவி போல சுறுசுறுப்பாக அம்மா இயங்குவார்' என அடித்து விட்டார். ஆனால், ஜெயலலிதா இறந்து விட்டார்.
அதேபோல், ஜெயலலிதாவுக்கு பிறகு, 'சசிகலாவுக்கு முதல்வர் பதவி தேடி வரும்' என அளந்து விட்டார். ஆனால், சசிகலாவுக்கு பெங்களூருவில் இருந்து 'காப்பு' தான் வந்தது. அப்போதே திருநெல்வேலி, திருவண்ணாமலை மாவட்ட, முன்னாள் அமைச்சர்கள் இருவரிடம், மறுபடியும் பதவி வாங்கி தருவதாக கூறி பல லட்சங்களை கறந்து விட்டார் எனக் கூறப்பட்டது. இப்போது, மறுபடியும் 'சசிகலாவின் ஆஸ்தான ஜோதிடர் நான்தான்' என பலரிடம் கூறி வருகிறாராம் ஜமால். சசிகலா முதல்வராக பதவியேற்று இருந்தால் ஜோதிடர் ஜமால், அதிமுக வட்டாரத்தில் மிகுந்த செல்வாக்கும், மரியாதைக்கும் உரிய நபராக மாறி இருந்திருப்பார். அப்போதே அவரைப் பார்த்து அமைச்சர்கள் கும்பிட்டபடிதான் செல்வார்கள்.
ஆனால் நிலைமை இப்போது சசிகலா விஷயத்தில் தலைகீழாக மாறியதால் ’சசிகலாவின் ஜோதிடர் நான்தான்... சசிகலாவின் ஜோதிடர் நான்தான்'’’ என தானாகவே தம்பட்டம் அடித்துக் கொள்ளும் நிலைக்கு சென்று விட்டார் ஜமால்... ஜமாலுக்கும் கட்டம் சரியில்லையோ..!