•வங்கிகள் மற்றும் காப்பீட்டு நிறுவனங்களை முற்று முழுதாகத் தனியாருக்கு விற்க ஏற்கனவே முடிவு செய்துள்ள ஒன்றிய அரசு, தற்போது மிச்சமீதம் உள்ள அரசுத்துறைகளையும் தனியாருக்கு விற்பது, நாட்டினைக் கூறுபோட்டு விற்கும் கொடுஞ்செயலன்றி வேறில்லை.

பொதுத்துறை நிறுவனங்களைத் தனியாருக்குத் தாரைவார்க்கும் பாஜக அரசை கண்டித்து சீமான் அறிக்கை விடுத்துள்ளார். அதன் விவரம் பின்வருமாறு: நாட்டு மக்களின் வியர்வையையும், இரத்தத்தையும் வரிப்பணமாகப் பெற்று உருவாக்கப்பட்ட பொதுத்துறை நிறுவனங்களைத் தனியாருக்குத் தாரைவார்க்கும் பாஜக அரசின் செயல் அதிர்ச்சியளிக்கிறது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

• நாட்டின் பொருளாதாரத்தை முற்றாகச் சீர்குலைத்துவிட்டு, அதனை சமப்படுத்த பொதுத்துறை நிறுவனங்களைத் தான்தோன்றித்தனமாகக் தனியாருக்குக் கையளிக்கும் பாஜக அரசின் எதேச்சதிகாரப்போக்கானது இந்தியாவின் எதிர்காலத்தைப் புதைகுழியில் தள்ளும் கொடுஞ்செயலாகும். 

•பணமாக்கல் திட்டம் (National Monetisation Pipeline) எனும் பெயரில் நாட்டின் உட்கட்டமைப்பு சார்ந்த நிறுவனங்களைத் தனியார் நிறுவனங்களுக்குக் கொடுப்பது, வீட்டைக் கொளுத்தி வெளிச்சத்தைத் தேடும் மூடத்தனமாகும்.

• பாஜக அரசின் 7 ஆண்டுகாலக் கொடுங்கோல் ஆட்சியில் கொண்டு வரப்பட்ட பணமதிப்பிழப்பு, சரக்கு மற்றும் சேவை வரிவிதிப்பு முறை ஆகிய தவறான முடிவுகளால் நாட்டின் பொருளாதாரம் பல ஆண்டுகள் பின்நோக்கிச்சென்றது. சுதந்திர இந்தியாவில் சந்தித்திடாத அளவுக்கு மிகப்பெரும் பொருளாதார நெருக்கடியையும், நிதிப்பற்றாக்குறையையும் எதிர்நோக்க நேரிட்டது. 

• பல கோடிக்கணக்கான மக்களின் வேலைவாய்ப்புகள் பறிபோய், பல இலட்சணக்கான தொழில்கள் நலிவுற்று, உள்நாட்டு உற்பத்தி வரலாறு காணாத வகையில் வீழ்ந்துவிட்டது. போர்க்காலங்களில்கூடப் பயன்படுத்தப்படாத இந்திய ரிசர்வ் வங்கியின் ஒரு இலட்சம் கோடி சேமிப்புக் கையிருப்பையும் எடுக்குமளவுக்கு நிறுத்தியிருக்கிறது மோடி தலைமையிலான கையாலாகாத பாஜக அரசு.

•‘சுதந்திர இந்தியாவின் கோயில்கள்’என முன்னாள் பிரதமர் நேரு அவர்களால் வர்ணிக்கப்பட்ட பொதுத்துறை நிறுவனங்களைத் தனியாரிடம் தள்ளிவிடும் மிகமோசமான நிர்வாகச்செயல்பாடானது சுதேசி இயக்கம் கண்டு வெள்ளையரிடம் உயிரையே விலையாகக் கொடுத்த நாட்டின் முன்னோர்களுக்குச் செய்யும் பச்சைத்துரோகமாகும்.

• இழப்பைச் சந்தித்து வரும் பொதுத்துறை நிறுவனங்களைச் சீர்செய்து, இலாபத்தில் இயங்கச்செய்யாது தனியாருக்குக் கொடுப்பதென்பது இந்திய நாட்டையே முதலாளிகளின் வசம் ஒப்படைப்பதாகும்.

• ஏறத்தாழ 6 இலட்சம் கோடி ரூபாயைத் திரட்டும் நோக்கமாகக் கொண்டது எனக்கூறி பெருமிதம் கொண்டாலும், இது நாட்டின் பொருளாதாரத்தை அதலபாதாளத்திற்குத் தள்ளும் தற்கொலை முடிவாகும்.

•வங்கிகள் மற்றும் காப்பீட்டு நிறுவனங்களை முற்று முழுதாகத் தனியாருக்கு விற்க ஏற்கனவே முடிவு செய்துள்ள ஒன்றிய அரசு, தற்போது மிச்சமீதம் உள்ள அரசுத்துறைகளையும் தனியாருக்கு விற்பது, நாட்டினைக் கூறுபோட்டு விற்கும் கொடுஞ்செயலன்றி வேறில்லை.

பொதுத்துறை நிறுவனங்களைத் தனியாருக்குத் தாரை வார்ப்பதென்பது நாட்டின் வளங்களையும், நாட்டு மக்களின் பாதுகாப்பையும், இந்நாட்டின் இறையாண்மையையும் முற்றுமுழுதாகத் தனிப்பெரு முதலாளிகளிடமும், பன்னாட்டுக்கூட்டிணைவு நிறுவனங்களிடமும் அடகு வைக்கக்கூடியப் பேராபத்தாகும். 

இதனை உடனடியாகக் கைவிட வேண்டுமென ஒன்றியத்தை ஆளும் பாஜக அரசை வலியுறுத்துகிறேன். மக்களின் எதிர்ப்பையும் மீறி இதனைச் செயல்படுத்தும்பட்சத்தில், இந்திய நாடு மீண்டும் காலனி நாடாக மாறும் அபாயம் ஏற்படுமென எச்சரிக்கிறேன்.