என்னங்க எடப்பாடி… இது கூட தெரியாம இருக்கீங்க…? மாஸ் காட்டிய அமைச்சர் மா.சு…!
சென்னையில் மண்டலத்துக்கு ஒரு அதிகாரி என்று நேற்றே நியமிக்கப்பட்டது தெரியாமல் எடப்பாடி பழனிசாமி பேசி இருப்பதாக அமைச்சர் மா. சுப்ரமணியன் கூறி இருக்கிறார்.
சென்னை: சென்னையில் மண்டலத்துக்கு ஒரு அதிகாரி என்று நேற்றே நியமிக்கப்பட்டது தெரியாமல் எடப்பாடி பழனிசாமி பேசி இருப்பதாக அமைச்சர் மா. சுப்ரமணியன் கூறி இருக்கிறார்.
இந்த ஆண்டு இப்படி தான் இருக்கும் என்று யாரும் நினைத்துக் கூட பார்த்து இருக்க முடியாது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை போட்டு உலுக்கி வருகிறது.
கிட்டத்தட்ட 2 வாரங்களாக தமிழகத்தில் பருவமழை பெய்து வந்தாலும் கடந்த 2 நாட்களாகவே நிலைமையே வேறாக இருக்கிறது. தமிழகம் முழுவதும் பருவமழை விடாது பெய்து வருகிறது. சென்னை மட்டுமல்லாது, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், கடலூர், கோவை, சேலம் என பெரும்பாலான மாவட்டங்களை மழை அதகளம் பண்ணியிருக்கிறது.
குறிப்பாக தலைநகர் சென்னை 2015ம் ஆண்டை ஞாபகம் தருவதாக உள்ளது. நகரிலும், புறநகரிலும் எங்கு பார்த்தாலும் சாலைகளும், தெருக்களும் தெரியாத அளவுக்கு மழைநீராக காட்சி அளிக்கிறது. பல பகுதிகளில் மழைநீர் தேங்கி போக்குவரத்து முடங்கியது.
மக்களின் இயல்பு வாழ்க்கையும் பெருமளவு பாதிக்கப்பட்டு உள்ளது. மழை நிலவரம், வெள்ள பாதிப்பு குறித்து முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை கூட்டங்கள் நடத்தி முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை முடுக்கிவிட்ட வண்ணம் உள்ளார்.
இது போதாது என்பதை உணர்த்தும் பொருட்டு தாமே 2 நாட்களாக களத்தில் இறங்கி பணிகளை மேற்பார்வையிட்டு ஆய்வு நடத்தி வருகிறார். அவருடன் அமைச்சர்களும் நகரில் வலம் வந்து வெள்ள பாதிப்பை கண்டு போர்க்கால நடவடிக்கைகளில் இறங்கி உள்ளனர்.
சென்னை மட்டுமல்லாது மற்ற மாவட்டங்களிலும் வெள்ள பாதிப்பு முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் வேகம் எடுத்து வருகின்றன. நிலைமைகள் இப்படி இருக்க… சென்னையில் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி இன்று நேரில் சென்று பார்த்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி, தமிழக அரசு போதிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என்று குற்றம்சாட்டினார். அவரின் இந்த குற்றச்சாட்டுக்கு தமிழக அமைச்சர்கள் கடும் கண்டனங்களையும், விமர்சனங்களையும் முன் வைத்து வருகின்றனர்.
அதிமுக ஆட்சிக்காலத்தில் இருந்த போது அதிகாரிகள் எப்படி இருந்தார்களோ இப்போது அப்படி இல்லை. மக்கள் அதிமுக ஆட்சியில் 10 நாட்கள் கூட உணவில்லாமல் தவித்தனர்.ஹெலிகாப்டரில் உணவு பொருட்கள் போடும் நிலைமை வந்தது. ஆனால் தற்போது மீட்பு நடவடிக்கைகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன என்று அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமசந்திரன் விளக்கம் அளித்து உள்ளார்.
இவரின் விளக்கம் பற்றிய விவாதங்கள் இருந்தாலும், சென்னையில் உள்ள அனைத்து தெருக்களையும் நன்கு அறிந்த அமைச்சர் மா. சுப்பிரமணியன் முன் வைத்த விமர்சனம் கூர்ந்து கவனிக்கப்படுகிறது.
சென்னையில் மண்டலத்திற்கு ஒரு ஐஏஎஸ் அதிகாரி என்ற அடிப்படையில் நேற்றே ஒரு அதிகாரி நியமிக்கப்பட்டு விட்டார். இது கூட தெரியாமல் தமிழக அரசை பற்றி புகார் கூறி இருக்கிறார் என்று விளாசி இருக்கிறார்.
கஜா புயல் தருணத்தில் மக்கள் அவதிப்பட்ட போது புயல் ஓய்ந்த பின்னர் மக்களை சந்திக்கும் முதல்வர் எங்களின் முதல்வர் கிடையாது, மழை பெய்யும் போதே மக்களோடு மக்களாக களத்தில் நின்று பணிகளை மேற்பார்வை செய்து உத்தரவிட்டு வருகிறார் என்று போட்டு தாக்கி இருக்கிறார் மா.சு.