மம்தா பானர்ஜி ரூட் எடுக்கும் சு.சுவாமி… பரபரக்கும் பாஜக வட்டாரம்!!
மோடி அரசு அனைத்திலும் தோல்வியடைந்துள்ளது என்று பாஜகவின் மூத்த தலைவரும் மாநிலங்களவை எம்.பி.யுமான சுப்பிரமணியன் சுவாமி குற்றம் சாட்டி உள்ளார்.
மோடி அரசு அனைத்திலும் தோல்வியடைந்துள்ளது என்று பாஜகவின் மூத்த தலைவரும் மாநிலங்களவை எம்.பி.யுமான சுப்பிரமணியன் சுவாமி குற்றம் சாட்டி உள்ளார். மேற்கு வங்க மாநிலத்தையும் தாண்டி வடகிழக்கு மாநிலங்களிலும் தனது கட்சியை வளர்க்க வேண்டும் என திரிணாமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இதன் காரணமாக திரிபுராவில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் ஆளும் பாரதிய ஜனதாவுக்கும், திரிணாமூல் காங்கிரஸுக்கும் இடையே கடுமையான போட்டி நிலவியது. தற்போது திரிபுராவை அடுத்து மேகாலயா மாநிலத்திலும் திரிணாமூல் காங்கிரஸைப் பலப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில்தான் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பல முக்கிய தலைவர்கள் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்துள்ளனர். அந்த வகையில் கோவாவில் லூயிசின்ஹோ ஃபலேரோ, பிரணாப் முகர்ஜியின் மகன் அபிஜித் முகர்ஜி, சில்சாரின் முன்னாள் காங்கிரஸ் எம்பி மற்றும் மறைந்த காங்கிரஸ் பிரமுகர் சந்தோஷ் மோகன் தேவின் மகள் சுஷ்மிதா தேவ் உள்ளிட்ட பல தலைவர்கள் திரிணாமுல் காங்கிரசுக்கு வந்துள்ளனர். இதுமட்டுமின்றி மேகாலயாவில் உள்ள 17 காங்கிரஸ் எம்எல்ஏக்களில் 12 பேர் திரிணாமுல் காங்கிரசில் சேர உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கிடையே பாஜகவின் மூத்த தலைவரும் மாநிலங்களவை எம்.பி.யுமான சுப்பிரமணியன் சுவாமியை நேற்று டெல்லியில் மம்தா பானர்ஜி சந்தித்து பேசினார்.
ஏற்கனவே பாஜக தலைமை மீது அதிருப்தியில் இருக்கும் சுப்பிரமணியன் சுவாமி, பாஜக அரசின் பொருளாதார நடவடிக்கைகள் மற்றும் பல்வேறு நடவடிக்கைகளை அவ்வப்போது குற்றம் சாட்டி வருவதுடன், மத்திய அரசின் தவறுகளையும் அவ்வப்போது சுட்டிக் காட்டி வருகிறார். இந்த சந்திப்புக்கு பிறகு திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் சேருவார் என்று தகவல்கள் வெளியாகின. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், தான் ஏற்கெனவே மம்தா பானர்ஜி பக்கம் தான் என்றும் கட்சி மாற வேண்டிய அவசியம் கிடையாது என்றும் தெரிவித்தார். மேலும் இந்திய தேசக்கட்டுமானத்தின் முக்கியத் தலைவர்களான ஜெயபிரகாஷ் நாராயணன், மொரார்ஜி தேசாய், ராஜிவ் காந்தி, சந்திரசேகர், பி.வி.நரசிம்ம ராவ் ஆகியோருடன் மம்தாவை ஒப்பிட்டு இவர்களெல்லாம் சொல்வதை வாழ்ந்தனர், இவர்களிடத்தில் சொல்லுக்கும் பொருளுக்கும் முரண் இருந்ததில்லை, இது பெரிய அரிய குணம். அந்தப் பெருந்தலைவர்கள் என்ன சொன்னார்களோ அது அர்த்தம் நிரம்பியது, அர்த்தம் நிரம்பியதுதான் அவர்கள் சொல்லாகவே இருந்தது என்று மம்தாவை அவர்களுடன் ஒப்பிட்டு சுப்பிரமணியன் சுவாமி பாராட்டினார்.
இவர் ஏற்கனவே நிதியமைச்சராக நிர்மலா சீதாராமனுக்கு பொருளாதாரமே தெரியாது என கடுமையாக விமர்சித்து பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார். இந்த நிலையில் தற்போது மோடி அரசு அனைத்திலும் தோல்வியடைந்துள்ளது என்று குற்றம் சாட்டி உள்ளார். இதுக்குறித்த அவரது டிவிட்டர் பதிவில், மோடி அரசின் ரிப்போர்ட் கார்டு என்று குறிப்பிட்டு, பொருளாதாரம் - தோல்வி, எல்லை பாதுகாப்பு - தோல்வி, வெளியுறவுக் கொள்கை - ஆப்கானிஸ்தான் ஃபியாஸ்கோ, தேசிய பாதுகாப்பு - பெகாசஸ் NSO, உள் பாதுகாப்பு - காஷ்மீர் இருள், யார் பொறுப்பு? என்று பதிவிட்டிருந்தார்.
நாட்டின் பொருளாதாரத்தை வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு செல்வதில் தோல்வி, எல்லை பாதுகாப்பிலும் சீனாவின் அத்துமீறலை தட்டி கேட்க முடியாத அளவுக்கு தோல்வியையே சந்தித்துள்ளது. வெளிநாட்டுக் கொள்கையில் ஆப்கானிஸ்தான் விவகாரத்திலும் தோல்வி அடைந்துவிட்டது. தேச பாதுகாப்பில் பெகாசஸ் என்ற மென்பொருள் மூலம் அரசியல் தலைவர்கள், நீதிபதிகள், பத்திரிகையாளர்கள் உள்ளிட்டோர் உளவு பார்க்கப்பட்டனர். காஷ்மீர் பிரச்சினை / உள்நாட்டு பாதுகாப்பிலும் தோல்வி; அதிலும் பிரச்சினை தலைதூக்கியுள்ளது. இத்தனை தோல்விகளை சந்தித்த நிலையில் இதற்கு யார் பொறுப்பு என கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், மற்றொரு டிவிட்டர் பதிவில், வங்காளத்தில் இந்துக்களைக் கொல்வது பற்றி அரசு என்ன நினைக்கிறிது? இது மத்திய அரசுக்குத் தெரியாதா? உள்துறை அமைச்சருக்கு தெரியாதா? அவர் சன்யாசம் போயிட்டாரா? ஏபிகள் மற்றும் ஜிபிகள் அவர் தங்கள் புரவலர் என்பதால் அவரிடம் கேட்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.