கூத்தாடிகள் ஒன்றும் செய்யப் போவதில்லை..! ரஜினி,கமலை போட்டு தாக்கிய சு.சாமி..!
சினிமா கூத்தாடிகள் தமிழகத்திற்கு எதுவும் செய்யப்போவதில்லை என்று சுப்ரமணிய சுவாமி தெரிவித்துள்ளார்.
பாஜக மூத்த தலைவர்களுள் ஒருவராக இருப்பவர் சுப்ரமணிய சுவாமி. பல அதிரடி கருத்துக்களை தெரிவித்து அவ்வப்போது சர்ச்சைகளை கிளப்பி விடுவார். இந்த நிலையில் சென்னை விமான நிலையத்தில் இன்று காலை செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அவரிடம் தமிழக அரசியல் வெற்றிடத்தை ரஜினிகாந்த் நிரப்புவாரா? என்று கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த சுப்ரமணிய சுவாமி, சினிமா கூத்தாடிகள் தமிழகத்திற்கு எதுவும் செய்யப்போவது இல்லை என்று கூறினார்.
படம் வெளிவரும் போது விளம்பரத்துக்காக பேசுவார்கள் என்றும் அரசியலுக்கு வருகிறேன், வருகிறேன் என பலமுறை கூறியும் இதுவரை ஒன்றும் நடக்கவில்லை என்றார். மேலும் ரஜினி-கமல் இணைவதாக கூறியிருப்பது பற்றி கேட்டதற்கு, இதுபோல நிறைய வசனங்களை கேட்டு கேட்டு அலுத்து விட்டதாக தெரிவித்தார்.
சசிகலா சிறையில் இருந்து வெளி வர இன்னும் ஒரு ஆண்டே இருப்பதாகவும், கட்சியை திறம்பட வழிநடத்தும் தகுதி அவருக்கு இருப்பதாகவும் சுப்ரமணிய சுவாமி தெரிவித்தார். அவர் சிறையில் இருந்து வெளியே வந்தால் அதிமுகவினர் சசிகலா பக்கம் செல்வார்கள் என தாம் எதிர்பார்ப்பதாகவும் கூறினார்.