சொத்துக்குவிப்பு வழக்கில் உச்ச நீதிமன்றம் இறுதித் தீர்ப்பு வழங்கி சசிகலாகுற்றவாளி எனத் தீரப்பளித்துவிட்டது. இந்த நிலையில், தமிழக ஆளுநர்வித்யாசாகர் ராவ் (மத்திய அரசின் நிர்பந்தத்துக்கு பணியாமல்) மாநிலத்தில் புதிய ஆட்சி அமைக்க சுயமாக முடிவு எடுக்க வேண்டும் என்று பாரதிய ஜனதா கட்சி எம்.பி. சுப்பிரமணிய சாமி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் அதிமுக கட்சியில் ஏற்பட்ட பிளவால் அரசியலில் பெரிய குழப்பம் நிலவுகிறது. அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை சென்றதால், அவருக்கு பதிலாக எடப்பாடி பழனிச்சாமியை சட்டமன்ற தலைவராகத் அந்த கட்சியினர் தேர்வு செய்துள்ளனர்.
அதேசமயம், காபந்து முதல்வராகச் செயல்படும் ஓ.பன்னீர் செல்வம் தானும் பெரும்பான்மையை நிரூபிக்க முடியும் என்று, ஆளுநரிடம் மனு அளித்துள்ளார். இதனால், யாரை பதவி ஏற்க அழைப்பது குறித்து சட்டவல்லுநர்களுடன் ஆளுநர் ஆலோசித்து வருகிறார்.
இந்நிலையில் பாரதிய ஜனதா கட்சியின் எம்.பி. சுப்பிரமணிய சாமி டெல்லியில் நிருபர்களுக்கு நேற்று பேட்டி அளித்தார். அப்போது அவர் பேசியதாவது-
தமிழகத்தில் புதிய ஆட்சி அமைக்க யாரை அழைப்பதில் என்று முடிவு செய்வதில் ஆளுநர் வித்யாசாகர் (மத்திய அரசின் நிர்பந்தங்களுக்கு பணியாமல்) யாருடைய பேச்சையும் கேட்காமல், சுயமாக முடிவு எடுக்க வேண்டும். சட்டவல்லுநர்கள்,மூத்த வழக்கறிஞர்கள் ஆகியோரிடம் ஆலோசனை கேட்டு இறுதி முடிவு எடுக்கலாம்.
சசிகலா முதல்வராக வரமுடியாமல் சில நேரங்களில் போகலாம். ஆனால், அதிமுக கட்சியின் தலைவர் சசிகலா என்பதை அறிய வேண்டும். மற்றொரு பக்கம் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், தனக்கு ஆதரவு அளிக்கும் எம்.எல்.ஏ.க்கள் பட்டியல் குறித்து ஆளுநரிடம் அளிக்கவில்லை. யாருடைய ஆலோசனையை கேட்டு ஆளுநர் வித்யாசாகர் ராவ் இன்னும் முடிவு எடுக்காமல் இருக்கிறார் என்று எனக்குத் தெரியவில்லை.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
